Cinema History
இதைக் கூட செய்துள்ளாரா இயக்குனர் கே.பாக்யராஜ்? இவரது படங்களில் சுவையான சில ரசனைகள்
நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் ஒரு காலத்தில் தாய்மார்களை சுண்டி இழுத்து தன் படங்களைப் பார்க்க வைத்தவர். இவரது படங்களில் உள்ள திரைக்கதை அம்சம் எப்பேர்ப்பட்ட ரசிகனையும் கவர்ந்து விடும். அந்தளவுக்கு அது யதார்த்தம் மாறாமல் மெருகேற்றப்பட்டு இருக்கும்.
குறிப்பாக சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் வாழ்வியலை அழகாக சித்தரித்து இருப்பார். அவனது காதல், வீரம், சோகம், அலப்பறை, ஆனந்தம், அசட்டுத்தனம், கலாட்டா, அடிதடி, மோகம் ஆகியவற்றை தவறாமல் தனது படங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார்.
இவை நாசூக்காகச் சொல்லியிருப்பதால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உதாரணத்திற்கு முந்தானை முடிச்சு படத்தில் வரும் முருங்கைக்காய் சீனைச் சொல்லலாம். அப்படிப்பட்ட படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
முந்தானை முடிச்சு
இந்தப்படத்தின் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு முதலில் வருவது முருங்கைக்காய் தான். அந்த அளவு இந்தப்படத்திற்கு மவுசு. அதே நேரம் குடும்பக்கட்டுப்பாட்டையும் படத்தில் வலியுறுத்திச் சொல்லியிருப்பார்.
இந்தப்படத்தில் வாத்தியாராக வரும் பாக்கியராஜ் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு என்னென்ன விஷயங்களை எல்லாம் லாவகமாக செய்கிறார் என்பதைப் பார்க்க பார்க்க ரசிகனுக்கு இவர் மேல் தனி மரியாதை மற்றும் அப்பியாசம் ஏற்பட்டு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற பேராவலைத் தூண்டி விடும். அப்படி வெற்றி பெற்ற படம் தான் இது. வெள்ளிவிழாவைக் கண்டு வெற்றிகரமாக ஓடியது.
1983ல் வெளியான இப்படத்தில் பாக்யராஜ் உடன் ஊர்வசி, தவக்களை ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ஊர்வசி இந்தப்படத்தில் தான் அறிமுகம். ஆனால் முதல் படம் போல் இல்லாமல் பிரமாதமாக நடித்து இருந்தார்.
கதை எழுதி இயக்கிய விதத்தில் பாக்யராஜ் தனி முத்திரை பதித்து இருந்தார். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டன.
விளக்கு வச்ச நேரத்திலே, சின்னஞ்சிறு கிளியே, கண்ணத் தொறக்கணும் சாமி, அந்தி வரும் நேரம், நா புடிச்ச மாப்பிள்ளைக்கு, வா வா வாத்தியாரே வா ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாயின.
ஒரு கை ஓசை
1980ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கே.பாக்யராஜ். அவருடன் அஸ்வினி நடித்துள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். நான் நீரோடையில், முத்துத் தாரகை வான வீதி, சேலை இல்லை, மச்சானே வாங்கையா ஆகிய பாடல்கள் உள்ளன.
ஒரு கையைத் தட்டினால் ஓசை வராது. இரண்டு கைகளைத் தட்டினால் தான் ஓசை வரும். அதனால் தான் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு கையாலும் ஓசை வரும் என்று பாக்யராஜ் சொல்லியிருக்கிறார் என்றால் அதைப் படத்தைப் பார்த்தால் தானே தெரியும்.
இன்று போய் நாளை வா
1981ல் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படம் இது. இளையராஜாவின் வசீகரமான இசையில் மயங்காதவர்களே இப்பூவுலகில் இல்லை எனலாம். பாடல்கள் அனைத்தும் அவ்ளோ இனிமை. பாக்யராஜூக்கு ஜோடியாக ராதிகா நடித்துள்ளார்.
உடன் கல்லாப்பெட்டி சிங்காரம், செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். அம்மாடி சின்ன பாப்பா, மதனா, மோகனா, ரூபா, சுந்தரி, அம்மாடி சின்ன பாப்பா, மடானா மோகனா ரூபா, சுந்தரி உள்பட பலர் நடித்துள்ளனர். பலநாள் ஆசை, அம்மாடி சின்ன, மதன மோகனா உள்பட பல பாடல்கள் உள்ளன.
மௌனகீதங்கள்
1981ல் வெளிவந்த படம் இது. கே.பாக்யராஜ் நடித்து இயக்கியிருந்தார். கங்கை அமரன் இசை அமைத்தார். சரிதா தனது அற்புதமான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
டேடி, டேடி, மாசமோ மார்கழி மாசம், மூக்குத்தி பூ மேலே ஆகிய பாடல்கள் உள்ளன. பாக்யராஜின் பட வரிசையில் இந்தப்படத்திற்கு இப்போதும் தனி இடம் உண்டு. அவ்வளவு ரசனைக்குரிய படம்.
ஞானப்பழம்
1996ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பாக்யராஜ் அல்ல. ஆர்.பி.விஸ்வம். நடித்து இசை அமைத்தவர் பாக்யராஜ். சுகன்யா, கவுண்டமணி, செந்தில், ரேகா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். படம் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டு இருக்கும்.
வழக்கம்போல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பாக்யராஜ். ஒரு கண்ணாடியை ஒரு கையால் தூக்கி விட்டு சரி செய்து கொள்ளும் தனது வழக்கமான ஸ்டைலை இந்தப்படத்திலும் விட்டு வைக்கவில்லை.