Cinema History
தாதா சாகிப் பால்கே இந்திய திரையுலகத்தந்தை ஆனது எப்படி? முதன் முதலாக சூரிய வெளிச்சத்திலேயே படம் எடுத்து சாதனை
தாதா சாகிப் பால்கே என்றதும் நம் நினைவுக்கு வருவது இந்திய சினிமாவின் உயர்ந்த விருது தான். இவர் பெயராலேயே அது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் இவர் செய்த மகத்தான சாதனைகள் என்னென்ன என்று பார்ப்போமா…
சினிமாத் தொழிலின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே யூகித்து அதற்காக வித்திட்டவர் தாதா சாகேப் பால்கே.
ஹரிச்சந்திரா படத்தை முதன் முதலில் சுட்டெரிக்கும் வெயிலில் சூரிய வெளிச்சத்தில் எடுத்த தயாரிப்பாளர் இவர் தான்.
நாசிக் நகரில் 1870ல் பிறந்தவர் தந்தை தாதாசாகிப் பால்கே. 1911ல் மூவர்ண அச்சுப்படங்களை இந்தியாவுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். பம்பாய் நகரின் தாதர் பகுதியில் சினிமா ஸ்டூடியோவை நிறுவினார்.
தாதா சாகிப்பிற்கு ஆர்ட், மேக்அப், படச்சுருளைக் கழுவுதல், எடிட்டிங் இதெல்லாம் ரொம்பவே சவாலாக இருந்தது. இதையெல்லாம் கடந்து அவர் எடுத்த படம் தான் ராஜா ஹரிச்சந்திரா. 1912ல் இந்தப்படத்தைத் தயாரித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இதுதான்.
ராஜா ஹரிச்சந்திராவின் பெரும்பாலான காட்சிகள் அவுட்டோர் சூட்டிங் தான். 3700 அடிகள் நீளம். தாதா சாகிப்பே ஹரிச்சந்திரனாகவும், அவரது 7 வயது மகன் லோகிதாசனாகவும், சந்திரமதியாக ஓர் இளைஞனும் நடித்தனர்.
1913ம் ஆண்டு மே 17ம் தேதி பம்பாயில் உள்ள காரனேஷன் சினிமாவில் படம் திரையிடப்பட்டது. மக்கள் ஆர்வம் பொங்க திரையரங்கில் வந்து குவிந்து விட்டனர். பத்திரிகையாளர்களும் தியேட்டர்க் காரர்களும் மனமுவந்து பாராட்டுதல்களைத் தெரிவித்தனர். அன்றைய வசூலை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்றார் தாதா சாகேப் பால்கே.
அந்த சமயத்தில் சூரத் நகரில் மட்டும் மக்கள் கூட்டமே இல்லை. தியேட்டர் உரிமையாளர் தாதா சாகிப்பிடம் வந்தார். இங்கு மக்கள் இரண்டனாவுக்கு ஆறு மணி நேரம் நடக்கும் நாடகக்கூத்துக்குச் சொல்வார்களே தவிர, அவர்கள் மூன்றணா கொடுத்து ஒரு மணிக்கும் குறைந்த நேரத்தில் ஓடும் படத்தைப் பார்க்க வர மாட்டார்கள். ஆகவே மக்களைக் கவர, ஏதாவது ஒரு புது வழியைக் கண்டு பிடிங்க என்றார்.
உடனே பால்கேயின் மனதில் ஒரு எண்ணம் பளிச்சென்று மின்னியது.
57ஆயிரம் போட்டோக்கள் கொண்ட கண்காட்சி, 2 மைல் நீளமுள்ள படத்தொகுப்பு எல்லாம் 3 அணாவுக்கு என புதுமையாக விளம்பரம் செய்தார். அவ்ளோ தான். மறுநாள் தியேட்டர் ஹவுஸ்புல்.
ஹரிச்சந்திரா 1919ல் இங்கிலாந்திலும் திரையிடப்பட்டது. கிருஷ்ண ஜன்மா, காளிங்க நர்த்தனம், லங்கா தகனம், பக்த ஹனுமான், சாவித்திரி போன்ற புராணப்படங்கள் என 25 ஆண்டுகளில் 125 படங்களைத் தயாரித்தார்.
இதிகாசப்படங்களையே அதிகமாக எடுத்தார். வெறும் 15 ஆயிரம் முதலீட்டில் தான் இந்த தொழிலை ஆரம்பித்தேன். 6ஆண்டுகள் கடும் உழைப்பைக் கொடுத்து இந்துஸ்தான் பிலிம் கம்பெனியை ஆரம்பித்து திரைப்படத் தொழிலையேத் தொடங்கியுள்ளார்.
அந்தக்காலத்திலேயே ஒரு படத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். திரைப்படத் தொழிலை விரிவுபடுத்த பயிற்சிக்கூடம் நிறுவி அதில் நடிப்பு, திரைக்கதை எழுதுதல் உள்பட பல அம்சங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்.
திரைப்படங்களில் முத்தக்காட்சி தேவையில்லை என்றும் கூறும் அவர் அதற்கான விளக்கத்தையும் தருகிறார். நம் நாட்டில் காதலர்கள் தெருவிலோ, பொது இடங்களிலோ முத்தமிட்டுக் கொள்வதில்லை.
நாம் காண்பதும் இல்லை. அம்மாதிரியே திரையிலும் நம்மவர்கள் விரும்ப மாட்டார்கள். நம் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் உண்மைகளை வெளி உலகுக்கு காண்பிப்பது இல்லை. யதார்த்தத்தையே மக்கள் விரும்புவர்.