Connect with us

டீக்கடை பையன் சொன்ன ஐடியா… எம்எஸ்வி. கொடுத்த சூப்பர் பாடல்..!

latest news

டீக்கடை பையன் சொன்ன ஐடியா… எம்எஸ்வி. கொடுத்த சூப்பர் பாடல்..!

மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. எப்படிப்பட்ட சாதனையாளர் என்பது எல்லாரும் அறிந்தது. அப்படி இருந்தும் அவர் எளிமையாக இருந்ததுதான் அவரது தனித்துவம். அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். ராஜபார்ட் ரங்கத்துரையின் பாடல் கம்போசிங் நடைபெற்றது. அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு பாடல் எழுதி அதற்கு இசை அமைக்கலாம் என்று எம்எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் முடிவு செய்தனர்.

உடனே கவிஞர் கண்ணதாசன் பாடலை எழுதத் தொடங்கினார். ‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம். உதய காலம் வரை உன்னத லீலைகளாம்’ என்று கண்ணதாசன் பாடல் எழுத எம்எஸ்.விஸ்வநாதன் அதற்கு டியூன் போட ஆரம்பித்து விட்டார். ஒரு டியூன் அல்ல. 2 டியூன் அல்ல. 8 டியூன் போட்டு விட்டார். ஆனால் எந்த டியூனும் அவருக்குத் திருப்திகரமாக அமையவில்லை. மதனமாளிகையில் என தொடங்கும்போதே அந்த டியூன் எல்லாருக்கும் கவர வேண்டும் என்று நினைத்தார்.

அப்போது கண்ணதாசன் இதுவரைக்கும் போட்ட அந்த 8 டியூனை திரும்பவும் போடு என சொன்னார். அந்த சமயம் பார்த்து கம்பெனிக்கார பையன் அங்கு உள்ளவர்களுக்கு டீ கொடுக்க வந்தான். அவனும் சும்மா போகவில்லை. ‘3வதா ஒரு டியூன் போட்டீங்கள்ல. அதையும் 7வதா போட்ட டியூனையும் சேர்த்துப் போடுங்க. பாட்டு சூப்பரா வரும்’னு சொன்னான்.

உடனே கவிஞர் ‘ஏன்டா இது காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா, போடா போடா’ன்னு சொன்னார். அந்தப் பையன் ஓரமாகப் போய் நின்றான். இப்போது புதிதாக ஒரு டியூனை எம்எஸ்வி. போட்டார். அது எல்லாருக்கும் மிகவும் பிடித்தது.

உடனே எம்எஸ்வி. ஒரு உண்மையைச் சொன்னார். ‘இப்போ அந்தப் பையன் சொன்னானே… அந்த மாதிரி தான் 3வது டியூனையும், 7வது டியூனையும் சேர்த்துப் போட்டேன். பாடல் பிரமாதமாக வந்துள்ளது’ என்றார். உடனே எல்லாரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

எம்எஸ்.வி.யைப் பொருத்தவரை எப்படிப்பட்ட விமர்சனம் வருதுன்னுதான் பார்ப்பாரே தவிர யாருக்கிட்ட இருந்து வருதுன்னு பார்க்கிறதே இல்லை. அதுதான் எம்எஸ்வி.யின் தனிச்சிறப்பு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top