எம்ஜிஆர் படங்களுக்கு இளையராஜா இசை அமைக்காததன் பின்னணி... இது எப்போ நடந்தது?

இசைஞானி இளையராஜா 80களில் தமிழ்சினிமாவில் ரசிகர்களை சுண்டி இழுத்தவர். இவர் பாடல்கள் என்றாலே அது சூப்பர்ஹிட் தான். இவரது பின்னணி இசையாலும், பாடல்களாலும் ஓடிய படங்கள் பல உள்ளன. அந்த வகையில் சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன், முரளி, சுரேஷ், ராம்கி, அருண்பாண்டியன், நெப்போலியன் என பல முன்னணி நடிகர்களுடைய படங்களுக்கும் இசை அமைத்தவர் இளையராஜா.
ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மட்டும் எந்தப் படத்துக்கும் இசை அமைக்கவில்லையே ஏன் என்ற கேள்வி எழலாம். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்.
ஒப்பந்தமான இளையராஜா: திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி எம்ஜிஆர் தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆனார். அதன்பிறகுதான் இளையராஜா ஒரு இசை அமைப்பாளராக தமிழ்சினிமாவில் கோலோச்சத் தொடங்கினார். அதன் காரணமாகத்தான் எம்ஜிஆர் படங்களுக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.w
இதை எல்லாம் தாண்டி முதல் அமைச்சராக இருந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எம்ஜிஆருக்கு இருந்தது. உடனடியாக அந்தப் படத்துக்குக் கதை, வசனத்தை வாலியை எழுதச் சொன்னார். அந்தப் படத்துக்கு இசை அமைக்க ஒப்பந்தமானது இளையராஜா தான்.
வாய்ப்பு அமையாமல் போனது: அந்தப் படத்துக்காக ஒரு பாடல் கூட பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஒரு சில அரசியல் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடராமல் போனது. அதனால்தான் எம்ஜிஆர் படத்துக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு இளையராஜாவுக்கு அமையாமல் போனது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேடைக்கச்சேரி: இளையராஜாவை ராகதேவன், இசைஞானி, இசைக்கடவுள் என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அவருக்கு வயது 83. இப்போதும் சற்றும் தளராமல் திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். பல மேடைக்கச்சேரிகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.