விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9ம் தேதியும், 10ம் தேதி பராசக்தி திரைப்படமும் வெளியாகவுள்ளது. பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினர் என்பதாலும், படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் பிக்சர்ஸ் என்பதாலும் வேண்டுமென்றே ஜனநாயகம் படத்திற்கு போட்டியாக இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என ஏற்கனவே பலரும் பேசி வருகிறார்கள்.
ஏனெனில் தமிழகத்தில் அதிகபட்சம் 1000 தியேட்டர்கள் இருக்கின்றன. ஜனநாயகம் படம் மட்டும் தனியாக வெளியானால் எல்லா தியேட்டர்களிலும் எல்லா காட்சிகளிலும் ஜனநாயகம் படம் மட்டுமே ஓடும். எனவே இந்த படம் அதிக வசூலையும் பெறும். ஆனால் போட்டியாக பராசக்தி படமும் களமிறங்கினால் கண்டிப்பாக தியேட்டர்களும் காட்சிகளும் குறையும்.
இதன் மூலம் ஜனநாயகன் படம் 10 நாளில் எடுக்க வேண்டிய வசூலை எடுப்பதற்கு 20 நாட்களாக மாறும். இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் கடந்த சில நாட்களாகவே அவர்கள் சிவகார்த்திகேயனை கடுமையாக திட்டி வருகிறார்கள்.

உண்மையில் இதற்கு பின்னணியில் சிவகார்த்திகேயன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியிருக்கிறார் என்பது உண்மை. ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் U மட்டுமே கொடுங்கள் என படக்குழு கேட்டு வருகிறது.
ஒருபக்கம் பராசக்தி படத்தால் ஜனநாயகன் படத்திற்கு திட்டமிட்டு எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகனுக்கு 600 தியேட்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மீதியுள்ள 400 தியேட்டர்களில் பராசக்தி படம் வெளியாகும் எனவும் தெரிகிறது.

அதோடு ஜனநாயகன் வெளியாகவுள்ள அந்த 600 தியேட்டர்களில் சில தியேட்டர்களில் இரண்டு காட்சிகள் பராசக்தி திரையிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே கண்டிப்பாக இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதற்கிடையில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு வருகிற 4ம் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ளதாக தெரிகிறது.விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த பிரச்சினை சுமூக முடிவை எட்டியதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கிறது.
