Cinema History
கவிஞர் கண்ணதாசன் கடனாளியானது ஏன்? எந்தப்படம் அவருக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது?
கவிஞர் கண்ணதாசன் சினிமா தயாரிக்க ஆசைப்பட்டு 1958ல் மாலையிட்ட மங்கை என்ற ஒரு படத்தை எடுத்தார். அது நன்றாக ஓடியது. இதில் டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், மைனாவதி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் 15 பாடல்கள் உள்ளன. அவற்றில் செந்தமிழ் தேன்மொழியாள் பாடல் தான் இன்று வரை மக்களின் மனதில் ரீங்காரமிடுகிறது.
கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான கவலை இல்லாத மனிதன் படத்தில் முதலில் சிவாஜி நடிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்தப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. ஜே.பி.சந்திரபாபுவை இந்தப்படத்தில் நடிக்க வைத்தார். அவரும் படம் முழுவதும் நடித்துக் கொடுத்தார். ஆனால் கடைசிக்காட்சி மட்டும் பாக்கி இருந்தது. ஆனால் அவர் நடிக்க வராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தது. இதனால் கண்ணதாசனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அதை எடுப்பதற்காக கவியரசர் கண்ணதாசன் அவர் வீடு தேடி போனார். கதவு பூட்டியிருந்தது. வீட்டுவாசலில் காத்திருந்தார். அதன் பின்னர் விசாரித்ததும் தான் தெரிந்தது. ஆனால் அவரோ புறவாசல் வழியாக வெளியே சென்று விட்டார். அதன்பின்னர் சந்திரபாபு இழுத்தடித்து ஒருவழியாக படத்தை நடித்துக் கொடுத்தார். ஆனால் படம் தோல்வியைத் தழுவியது.
இந்தப்படம் 1960ல் வெளிவந்தது. கே.சங்கர் இயக்கினார். சந்திரபாபுவுடன் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் அனைத்தும் முத்து முத்தாக உள்ளன. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார்.
அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசனே எழுதினார். காட்டில் மரம், கவலை இல்லாத மனிதன், நான் தெய்வமா, பெண் பார்க்க மாப்பிள்ளை, பிறக்கும் போதும் ஆகிய பாடல்கள் உள்ளன.
இந்தப்படத்தில் கண்ணதாசனை ஏமாற்றி சென்ற சந்திரபாபுவை நினைத்து அவர் பிறக்கும் போதும் அழுகின்றான்..இறக்கும் போதும் அழுகின்றான் என்ற பாடலை எழுதினார். பின்னர் அவரையே இந்தப்பாடலைப் படத்தில் பாடவும் வைத்தார்.
கண்ணதாசனின் பாடல்கள் எல்லாம் ஆழ்ந்து கவனித்தால் அது அனுபவத்தில் விளைந்தவை என்று தெரியும். அவை அனைத்தும் சிப்பிக்குள் முத்தாக ஜொலிக்கும். கண்ணதாசனின் பாடல்கள் யாவும் காலத்தால் அழியாதவை. இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். கருத்தாழமிக்க இந்தப்பாடல்கள் நம் வாழ்வியலை அழகாக சுவைபட எடுத்துக்கூறுவதில் வல்லவை.
கவலை இல்லாத மனிதனால் கவலைக்குரியவராக மாறிய கண்ணதாசன் வாழ்நாள் முழுவதும் கடனாளியானார். அவர் பாடல் எழுதிய கடைசி படம் மூன்றாம்பிறை. அதில் கண்ணே கலைமானே என்ற பாடலை எழுதியிருப்பார். அதுவரை கண்ணதாசன் கடனாளியாகத் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படம் சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியான நேரத்தில் வந்தது. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. சிவாஜி கணேசன் வீர பாண்டிய கட்டபொம்மனாக சிங்க நடை போட்டு வருவார். கிஸ்தி, திரை, கப்பம் என்று கர்ஜனையுடன் கம்பீரமாக வெள்ளையனுக்கு எதிராக மார்தட்டி பேசுவார். இதனால் பெரும் தோல்வி அடைந்தது.