ஒரு லாஜிக்கும் இல்ல!.. எதுக்கு பிரம்மாண்டம்?!. இந்தியன் 2-வை நக்கலடித்த அமீர்!…

0
132

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தியன் படம் வெளியாகி 28 வருடங்கள் ஆனநிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள இந்த படத்தில் கமல், சித்தார்த், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்துள்ளனர்.

முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் 2ம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. லைக்காவுக்கும், ஷங்கருக்கும் இடையே பஞ்சாயத்து, லைக்காவுக்கும், கமலுக்கும் இடையே பஞ்சாயத்து போன்றவற்றால் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

அதன்பின் கமலின் விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடிக்கவே லைக்கா நிறுவனமும் இந்தியன் 2-வை மீண்டும் தூசி தட்டியது. ஆனால், ஒரு கட்டத்தில் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கவே படம் நின்றுபோனது. அதன்பின் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் படம் லைக்காவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தது.

அதன்பின் படப்பிடிப்பு நடந்து இப்போது ரிலீஸும் ஆகிவிட்டது. ஆனால், இந்தியன் 2 படத்திற்கு கணிசமாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படட்தில் கதை என்பது ஒன்றுமில்லை. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்றே பலரும் சொல்கிறார்கள். விமர்சகர்களும் இதே கருத்தை சொல்லி வருகிறார்கள்.

படம் பார்த்த பலரும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் இப்படத்தை நக்கலடித்து பதிவிட்டும், மீம்ஸ் போட்டும் கலாய்த்து வருகின்றனர். எனவே, இந்தியன் 2 படத்தின் வசூல் பாதிக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இப்படம் எத்தகைய வரவேற்பை பெற்றது என்பது தெரிய வரும்.

இந்நிலையில், இன்று இப்படத்தை பார்த்த இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் ‘லாஜிக் இல்லாத கதை.. கதையே இல்லாத பிரம்மாண்டம்.. கமல் எனும் பிறவிக் கலைஞனுக்கு வாழ்த்துக்கள்’ என சொல்லி இருக்கிறார். இந்த இணையத்தில் பதிவிட்டு பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

google news