கர்ப்பிணி மனைவியின் கழுத்த அறுத்த கணவன் - பயத்தில் தற்கொலை!
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஹென்றி. இவர் பல்லடம் கேடபாளையம் பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அதே ஆலையில் பண்ருட்டியை சேர்ந்த சித்ரா என்கிற பெண் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது சித்ரா கர்ப்பாமாக உள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தனது மனைவியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என ஹென்றி ஆசைப்பட்டார். ஆனால், கர்ப்பத்தை காரணம் காட்டி இந்த சமயத்தில் பயணம் செய்யக்கூடாது என சித்ராவின் பெற்றோர் கூறி வந்துள்ளனர். இது தொடர்பாக தம்பதிக்குள் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று சித்ராவை ஹென்றி மீண்டும் தனது ஊருக்கு கூப்பிட்டுள்ளார். ஆனால், சித்ரா மறுப்பு தெரிவிக்க, கோபமடைந்த ஹென்றி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தில் குத்தியுள்ளார். சித்ரா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அதன்பின், அவசரப்பட்டு கர்ப்பிணியை கொன்றுவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் வீட்டிற்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சற்றுநேரம் கண்விழித்த சித்ரா கணவனை தேட, அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.