கதை மொக்கதான்.. ஆனா உங்க கேரக்டர் பெருசு.. சாய்பல்லவியை புகழ்றேனு படத்த சிதைச்சுப்புட்ட கமல்
அமரன்: சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கமல் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி இருந்தார். கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.
வெற்றிவிழா: மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. படம் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பாராட்டையும் பெற்றது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட கதை .அதுவும் இந்த நாட்டுக்காக அவர் என்னெல்லாம் தியாகம் செய்கிறார், அவருடைய குடும்பம் எப்படிப்பட்ட தியாகத்தையும் கஷ்டத்தையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை விளக்கும் திரைப்படமாக இந்த படம் அமைந்தது.
சாய்பல்லவியின் நடிப்பு: மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும் அவருடைய மனைவி இந்து ரெபக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. எமோஷன் காட்ட வேண்டிய இடத்தில் ,அழுகையை கண்ட்ரோல் பண்ண வேண்டிய இடத்தில், தன் மகளுக்காக உயிர் வாழ வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை, இனிமேல் அவளுக்கு நான் தான் உலகம் என அவர் எடுத்துக் கொண்ட உறுதி, தன் கணவர் இல்லை என்றாலும் அவரின் நினைவோடு தன் வாழ்க்கையை பயணிக்கும் ஒரு பெண்ணாக என அனைத்தையும் உள்வாங்கி தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்திய சாய்பல்லவியின் நடிப்பு இன்றுவரை படம் பார்த்த மக்களின் மனதில் ஒரு காட்சியாக ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது.
ரவுடி பேபி: இந்த நிலையில் படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் கமல் சாய் பல்லவி குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதாவது ஒரு முறை சாய்பல்லவியை சந்தித்த போது அவர் மிகுந்த கவலையுடன் பேசினாராம். அந்த கவலை சோகம் எல்லாமே கரெக்ட் தான் என கமல் கூறினார். அதாவது என்னை வெறும் ரவுடி பேபி ஆகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்களே என கவலையாக இருந்தது, அதை மாற்றி விட்டீர்கள் என சொன்னாராம் சாய்பல்லவி.
அதற்கு கமல் எனக்கு தெரியும் நீங்கள் ரவுடி பேபி ஆக மட்டும் இல்லை என்று. ஏனெனில் சின்ன படங்கள். அது அந்த படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் நீங்கள் அதில் பெரிதாக பேசப்பட்டீர்கள். அது ஒரு திறமைக்கான பெரிய உதாரணம். அந்தப் படத்தின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை .ஏனெனில் படம் சரியாக போகவில்லை ஆனாலும் உங்களுக்கு பேர் வந்தது என்று சொன்னால் படத்தை எடுத்தவர்கள் கவலைப்படுவார்கள். அடுத்த படம் நன்றாக எடுத்து விடுவார்கள். எனக்கு தெரியும் என கமல் கூறினார் .
இந்த வீடியோவை பார்த்த பலரும் கமல் சொன்ன அந்த படம் சாய்பல்லவி தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படம் தான் என கூறிவருகிறார்கள். மாரி படத்தின் முதல் பாகம் தான் சூப்பர் வெற்றியடைந்தது. ஆனால் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் அமைந்த ரவுடி பேபி பாடல்தான் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து பெரிய ஹிட்டான பாடல். அதன் பிறகு தமிழில் சாய்பல்லவி நடித்த படம் தான் அமரன். அதனால் இதை பற்றித்தான் கமல் கூறியிருப்பார் என்று ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள்.