ஜன நாயகன் லீக் பிரச்சனை.. தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது என்ன?
தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலை பற்றி பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
1980–90களில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் சமூக பிரச்சினைகள், அரசியல், இளைஞர் கருத்துகள் போன்றவை அவரது படங்களில் அதிகம் இடம்பெறும். புதிய நடிகர்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தவர். கேப்டன் விஜயகாந்தை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல படங்களையும் இயக்கினார்.
சமீப ஆண்டுகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும், சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்கியபோது, விஜய் அதிலிருந்து தன்னைத் தூரப்படுத்திக் கொண்டதாகவும் இருவரும் தனித்தனியாக அரசியல் மற்றும் தொழிலில் செயல்பட ஆரம்பித்ததாக கூறப்பட்டது.
விஜயின் சினிமா பயணத்தின் அடித்தளத்தை அமைத்தவர் அவர் தந்தை அதன் மேல் தனது முயற்சியால் வளர்ந்தவர் விஜய். இயக்குநர் , தந்தை , வழிகாட்டி என்ற மூன்று நிலைகளிலும் முக்கியமான பங்களித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வரலாறு காணாத வாக்கு எண்ணிகைக்கு காரணமாகவும் விஜய் அமைந்துள்ளார் என தவெகவினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த தேர்தலில் மக்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருந்தார்களோ அதே போல் நீங்களும் இருக்க வேண்டும். முதலில் பொதுக்கூட்டத்தில் எல்லாரும் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், தங்களின் அறிக்கைகளும், திட்டங்களும் வார்த்தை வடிவில் மட்டுமல்லாமல் செயல் வடிவிலும் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
ஜன நாயகன் படம் இணையத்தில் திருட்டுத் தனமாக லீக் ஆன விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்பது குறித்த கேள்விக்கு படத்தின் எடிட்டர் ராகவ் பிரதாப்பை இடைக்கால நீக்கம் செய்துள்ளதாக சங்க நிர்வாகிகள் பதில் அளித்தனர்.
ஓடிடி நிறுவனங்களின் தலையீடு, நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது போன்ற பல விசயங்கள் இந்த சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. லாபத்தில் வரும் ஷேர் அடிப்படையிலேயே முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற தீர்மானமும் மற்ற மாநில தயாரிப்பாளர்களுக்கு பதில், தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது.
