ப்ளாஷ்பேக்: 50களில் எம்ஜிஆரின் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? அட இவ்ளோதானா!

by sankaran v |
mgr
X

mgr

தமிழ்த்திரை உலகில் புரட்சி நடிகர், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். நாடகங்களில் நடித்து வந்த அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நுழைய எவ்வளவோ கஷ்டப்பட்டார். அதன்பிறகு தான் படிப்படியாக தனது திறமையைக் கொண்டு முன்னுக்கு வந்தார்.

1957ல் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான எம்ஜிஆர் படம் சக்கரவர்த்தி திருமகள். எம்ஜிஆருடன் இணைந்து என்எஸ்.கிருஷ்ணன் நடித்த படம் இது தான். அஞ்சலிதேவி கதாநாயகியா நடித்து அசத்தினார். பிஎஸ்.வீரப்பா தான் வில்லன். கே.ஏ.தங்கவேலு, டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ராமநாதனின் இசையில் பாடல்கள் சூப்பர்.

சீர்மேவும், காதலென்னும் சோலையிலே, பொறக்கும்போது, எண்ணம் எல்லாம், எல்லையில்லாத, அட வாங்க, அத்தானும் நான் தானே, கண்ணாளனே வாருங்க ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தில் ஆரம்பப் பாடலே கலைவாணருடன் எம்ஜிஆர் செய்யும் அறிவுப்போட்டி தான் பாடலாக அமைந்து இருக்கும். அது ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட பாடல். இந்தப் பாடலில் எம்ஜிஆரிடம் கலைவாணர் பல கேள்விகள் கேட்பார்.

எம்ஜிஆர் கரெக்டாகப் பதில் சொல்லி விடுவார். கடைசியாக எம்ஜிஆர் ஒரு கேள்வி கேட்பார். உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எதுன்னு. அதற்கு கலைவாணர் கத்தி, கோடரின்னு ஒவ்வொரு ஆயுதமாகச் சொல்வார். கடைசியில் அதெல்லாம் இல்லை என்றதும் எம்ஜிஆர் நெறிகெட்டுப் போன நயவஞ்சகனின் நாக்கு தான் அதுன்னு சொல்லி போட்டியில் ஜெயித்து விடுவார். பிரமாதமான இந்தப் பாடல் அக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்தப் படத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரோடு 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் துரைராஜ். எம்ஜிஆரின் பல படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். அவருடன் இணைந்து பணியாற்றுகிற வாய்ப்பைப் பெற்றவர் துரைராஜ். அவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் ப.நீலகண்டனின் உதவியாளராக பணியாற்றியதற்கு 200 ரூபாய் தான் சம்பளமாம். அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த எம்ஜிஆருக்கு 40 ஆயிரம் தான் சம்பளமாம். இப்போது கோடிக்கணக்கில் 100கோடி, 200 கோடி என சம்பளம் வாங்குகிறார்கள் நடிகர்கள். அதே நேரம் 68 ஆண்டுகளுக்கு முன் சம்பளம் இவ்வளவு தானா என்றால் அது அப்போதைய சம்பளத்தின்படி குறைவுதான். ஏன் என்றால் அப்போதே ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கிறார்கள்.

Next Story