Cinema History
கிருஷ்ணராக வலம் வந்து ஆட்சியை பிடித்த ராமாராவ்… ராவணனாக நடித்த கதை தெரியுமா??
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் என்.டி.ராமாராவ். 1950, 60களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தெலுங்கு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
குறிப்பாக என்.டி.ஆர் என்று சொன்னாலே அவர் நடித்த கிருஷ்ணர் வேடங்களும், ராமர் வேடங்களும்தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பல புராண திரைப்படங்களில் கிருஷ்ணர் வேடத்தில் அசத்தியவர் என்.டி.ராமாராவ்.
திரைத்துறையில் மட்டுமல்லாது, அரசியலிலும் களம்கண்டு மக்களின் மனதை வென்றவர் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சி என்ற சொந்த கட்சியை தொடங்கிய என்.டி.ஆர், மூன்று முறை முதல்வராக ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.
என்.டி.ராமாராவை ஆந்திர மக்கள் கிருஷ்ணராகவே பார்த்தனர். அந்த அளவுக்கு கிருஷ்ணர் வேடத்தில் மிகவும் பொருந்திப்போனார். கிருஷ்ணர் வேடம் போட்டே ஆட்சிக்கு வந்தவர் ராமாராவ் போன்ற பேச்சுக்கள் கூட அடிப்பட்டன.
இந்த நிலையில் கிருஷ்ணராகவே மக்கள் மனதில் பதிந்த ராமாராவ், ஒரு திரைப்படத்தில் ராவணனாக நடித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்!
1978 ஆம் ஆண்டு ஏவி மெய்யப்பச் செட்டியார் தயாரிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் “பூகைலாஷ்”. இத்திரைப்படத்தை கே. ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜமுனா ஆகியோர் நடித்திருந்தனர்.
புராண கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பத்து தல ராவணனாக என்.டி.ராமாராவ் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் அந்த காலத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இதில் ராவணனாக நடித்த என்.டி.ஆர், சிவனை வேண்டி வீணை வாசிப்பது போன்ற காட்சிகள் வரும். அந்த காட்சி மிகவும் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதற்காக, பிச்சுமணி என்ற பிரபல வீணை வித்வானை பணியில் அமர்த்தியிருக்கிறார் ஏவிஎம். ஏன் தெரியுமா?
என்.டி.ஆர் வீணை வாசிக்கும் காட்சியில் நடிக்கும்போது, அவரது விரல்கள், அந்த வீணை இசைக்கு ஏற்றார்போல் சரியாக இசைக்கிறதா என்பதை கவனித்து பார்ப்பதற்காகவே அந்த வீணை வித்வானை பணியில் அமர்த்தினாராம் ஏவிஎம். அந்த காலத்தில் ஒரு காட்சிக்காக இவ்வளவு நுணுக்கமாக படக்குழு உழைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.