mgr

மக்களால் வள்ளல் என அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர்.. சினிமா மூலம் மக்களிடமிருந்து அவர் என்ன சம்பாதித்தாரோ அதை எல்லாவற்றையும் அவர் மக்களுக்காகவே திருப்பிக் கொடுத்தார் என்பதால்தான் அந்த பட்டம் அவருக்கு கிடைத்தது. 60களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் எம்ஜிஆர்.. அவர் நடிப்பில் வெளிவந்த 99 சதவீத படங்கள் சூப்பர் ஹிட் படங்கள்தான். எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என நினைக்காமல் தனது திரைப்படங்களில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் எம்ஜிஆர்..

எம்ஜிஆர் சினிமாவில் நடித்து சூப்பர்ஸ்டாரக மாறி பல லட்சங்கள் சம்பளம் வாங்கி அரசியல் கட்சியை துவங்கி மூன்று முறை முதலமைச்சராக இருந்ததுதான் பலருக்கும் தெரியும்.. ஆனால் சிறு வயது முதல் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கும் வரை அவர் பல நாட்கள் பட்டினி கிடந்ததும், அவர்களின் குடும்பம் வறுமையில் வாடியதும் பலருக்கும் தெரியாது.. இன்னும் சொல்லப்போனால் வறுமை காரணமாகத்தான் சத்யா அம்மாள் எம்ஜிஆர், சக்கரபாணி ஆகிய இரு மகன்களையும் சிறுவயதிலேயே நாடகத்திற்கு அனுப்பினார்.. இருவரும் நாடகத்தில் சம்பாதித்த காசில்தான் அவர்களின் குடும்பம் சாப்பிட்டது..

இந்நிலையில்தான், பேச்சாளர் சுகிசிவம் ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். எம்ஜிஆர் சிறுவயதில் தினமும் காலை வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மூதாட்டியிடம் காலணா கொடுத்து புட்டு வாங்கி செல்வாராம். அதை அவர், அவரின் அண்ணன் மற்றும் அம்மா சத்யா மூன்று பேரும் சாப்பிடுவார்களாம்.. ஒருநாள் புட்டு வாங்க காலணா கூட அவரிடம் இல்லை. ஆனால், தன்னுடைய பசியை விட அம்மா பசியோடு இருக்கக்கூடாது.. அம்மாவுக்கு உணவு கொடுக்க வேண்டும் என நினைத்த எம்ஜிஆர் அந்த புட்டுக்கடைக்கு சென்றிருக்கிறார்.

ஆனால் காசு இல்லாமல் எப்படி வாங்குவது? எப்படி கேட்பது? என்கிற தயக்கம்.. கடைக்கு அருகில் செல்வது.. தயங்கி நிற்பது.. கடைக்கு அருகில் போவது.. தயங்கி நிற்பது என இருந்த அவரைப்பார்த்த அந்த மூதாட்டி ‘டேய் ராமச்சந்திரா.. உனக்கு என்னாச்சி?.. தினமும் காலணா புட்டு வாங்குவியே!.. ஏன் இப்படி தயங்கி நிக்கிறே?’ என்று கேட்டிருக்கிறார்..

அதற்கு எம்ஜிஆர் ‘இல்லம்மா என்கிட்ட இன்னைக்கு காலணா இல்லை.. ஆனா வீட்ல அம்மா பசியோட இருக்காங்க.. உங்ககிட்ட எப்படி கேட்கிறதுன்னு யோசிக்கிறேன்’ என சொல்ல ‘டேய் உன்கிட்ட நான் காசு கேட்டனா?.. நீ புட்டு எடுத்துட்டு போ.. காசு அப்புறமா குடு’ என சொல்லியிருக்கிறார்.. புட்டை எடுத்துக்கொண்ட எம்ஜிஆர் மூதாட்டியிடம் ‘நான் காசு கொடுக்காம இந்த ஊரை விட்டு போயிட்டா என்னம்மா பண்ணுவீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு பதில் சொன்ன அந்த மூதாட்டி ‘டேய்.. நீ காசு கொடுத்தா அதை வியாபார கணக்குல எழுதுவேன்.. நீ கொடுக்கலைன்னா அதை புண்ணிய கணக்குல எழுதுவேன் போடா’ என்று சொன்னாராம்..

லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அது புண்ணியம் என்கிற எண்ணத்தை சிறுவயதிலேயே எம்ஜிஆருக்கு பலரும் இப்படி சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அவர் நடிகரான பின் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.