Cinema History
ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!
மனித குல வரலாற்றை ஒரு பாட்டுக்குள்ள சொல்றதே ரொம்ப சிரமம். ஆனால் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டுக்குள்ள அவ்வளவு அழகா சொல்லிருப்பாரு. அது என்னன்னு பாருங்க.
1964ல் டிஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான படம் பணக்கார குடும்பம். மக்கள் திலகம் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதி டிஎம்.சௌந்தரராஜன், எல்ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே பாடல். இந்தப் பாட்டுக்கும், படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பணக்காரக் குடும்பம்னாலே குடும்பம் தொடர்பாகத் தான் பேசணும். அப்புறம் ஏன் இப்படி ஒரு பாடல்னு கேள்வி எழலாம். எம்ஜிஆர் படம்னாலே மக்கள் ஏதாவது ஒரு நல்லது சொல்வார்னு எதிர்பார்ப்பாங்க. இன்னொன்னு கவியரசர் கண்ணதாசனுக்கு திடீர்னு இந்த இடத்துல இந்தப் பாடலை வைத்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு எண்ணம் தோணும். அப்படி வந்தது தான் இந்தப் பாடல்.
அசோகனின் மகள் சரோஜாதேவி. அப்பா வசதியான குடும்பமாக இருந்தாலும் அவரை விட்டு வெளியேறி விடுகிறார் எம்ஜிஆர். இவர் சரோஜாதேவியைக் காதலிக்கிறார். இடையில் பல எதிர்ப்புகள் வந்தாலும் கடைசியில் சரோஜாதேவியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதுதான் கதை. இந்தப் படத்தில் வரும் பாடல் தான் ஒன்று எங்கள் ஜாதியே. இந்தப் பாடலின் பல்லவியில் சமத்துவத்தைப் பேசி இருக்கிறார் கண்ணதாசன்.
”ஒன்று எங்கள் ஜாதியே… ஒன்று எங்கள் நீதியே… உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே…” இவ்ளோதான் பல்லவி. இங்கு கவனிக்க வேண்டியது ஏமாற்றுறவங்க எல்லாம் ஒருவர் பெற்ற மக்கள் அல்ல. உழைக்கும் மக்களே என்கிறார். அடுத்து பாடலில் சமத்துவத்தைக் கொண்டு வந்துள்ளார். நிறத்தில் அல்ல என அழுத்தமாகச் சொல்கிறார். ”வெள்ளை மனிதன் வியர்வையும், கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே” என எந்த இடத்திலும் சந்தம் இடிக்காம அவ்வளவு நேர்த்தியாக அழகாக எழுதியுள்ளார் கவியரசர்.
மன்னராட்சி, மக்களாட்சி என்று சொல்லி விட்டு ”இல்லை என்பது இல்லை நாங்கள் வாழும் நாட்டிலே…” என 2வது சரணத்தில் சொல்லி இருக்கிறார். இங்கும் உழைப்பைப் பற்றித் தான் பேசுகிறார். உழைக்கும் மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா இல்லை என்ற சொல்லே இருக்காது என்கிறார்.
அடுத்த சரணத்தில் மனித குல வரலாறு எப்படி தோன்றியது என்பதை வெகு அழகாக சொல்லி இருக்கிறார். ”ஆதிமனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான். மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான். நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான். இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான். வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” என்று முக்காலத்தையும் நயம்படச் சொல்கிறார் கண்ணதாசன். இது படித்தவர், படிக்காதவர் என அத்தனை பேருக்கும் அவ்வளவு எளிதாகப் புரியும்.
