கண்ணதாசனின் பாட்டை தவறாக எழுதிய பஞ்சு அருணாச்சலம்… அப்போ இத்தனை நாள் தப்பாத்தான் பாடுறோமா!!

Published on: December 26, 2022
Kannadasan
---Advertisement---

தமிழ் சினிமாவின் கவியரசராகவும் தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவருமான கண்ணதாசனின் கவிப்புலமை குறித்து அறியாதவர்களே இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையில் தனது பாடல்களின் மூலம் ஒன்றிப்போனவர் கண்ணதாசன்.

கண்ணதாசனிடம் பலரும் உதவியாளராக திகழ்ந்து வந்தனர். அதில் மிகவும் முக்கியமானவராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். கண்ணதாசன் பாடல்களை சொல்ல சொல்ல அதனை பஞ்சு அருணாச்சலம் அருகில் அமர்ந்து எழுதுவார்.

Kannadasan and Panchu Arunachalam
Kannadasan and Panchu Arunachalam

கண்ணதாசன் பாடல் வரிகளை மிகவும் வேகமாக கூறுவாராம். அவருக்கு ஈடுகொடுத்து பஞ்சு அருணாச்சலத்தால் எழுத முடியாது என்பற்தகாக, சில சில வார்த்தைகளை மட்டும் குறிப்பு போல் எழுதிவைப்பாராம். உதாரணத்திற்கு “காலங்களில் அவள் வசந்தம்” என கண்ணதாசன் கூறினால் ‘கால அவ வச” என்று குறிப்பு போல் எழுதுவாராம். “கலைகளிலே அவள் ஓவியம்” என அடுத்த வரியை கூறினால் “கலை அவ ஓவி” என எழுதுவாராம்.

இவ்வாறு கண்ணதாசன் வேகமாக கூறும் பாடல் வரிகளை குறிப்பு போல் எழுதி வைத்து அதன் பின் அதனை நிரப்பிக்கொள்வாராம். இந்த நிலையில் கண்ணதாசன் ஒரு பாடலை கூற அதனை பஞ்சு அருணாச்சலம் தவறாக எழுதிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Odam Nadhiyinile song
Odam Nadhiyinile song

1962 ஆம் ஆண்டு “காத்திருந்த கண்கள்” என்ற திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல் “ஓடம் நதியினிலே”. இந்த பாடல் காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடலாக அமைந்தது. இந்த நிலையில் இந்த பாடலை எழுதியபோது கண்ணதாசன் “ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே” என கூறினாராம். அதனை குறிப்பெடுத்த பஞ்சு அருணாச்சலம் “ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே” என எழுதிவிட்டாராம்.

அதன் பின் அந்த பாடலை ரெக்கார்டு செய்த பிறகு கண்ணதாசன் அந்த பாடலை கேட்டுப்பார்த்தாராம். அப்போது “ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே” என வந்தவுடன், பஞ்சு அருணாச்சலத்தை அழைத்து “நான் கரையினிலே என்று கூறியதை தரையினிலே என எழுதிவிட்டாயடா” என திட்டினாராம். நாம் தவறு செய்துவிட்டோமே என வருந்தினாராம் பஞ்சு அருணாச்சலம்.

இதையும் படிங்க: சாவித்திரியை பார்க்க இவர்தான் அனுமதி கொடுக்கனுமாம்… ஜெமினி கணேசனாலயே முடியாதாம்… என்னப்பா சொல்றீங்க!!

Annadurai Kannadasan
Annadurai Kannadasan

நமது காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் இருப்பதால் ஒரு முறை பாடலை தவறாக ரெக்கார்டு செய்துவிட்டால், எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறதோ அந்த இடத்தை மட்டும் நீக்கிவிட்டு தேவையான ஒன்றை உருவாக்கி அந்த இடத்தை நிரப்பிவிடலாம். ஆனால் அந்த காலகட்டத்தில் அந்த தொழில்நுட்பம் எல்லாம் இல்லை என்பதால் மறுபடியும் முதலில் இருந்துதான் ரெக்கார்டு செய்யமுடியும். இதனால் நஷ்டம் ஏற்படும் என்பதை காரணமாக கொண்டு அப்படியே விட்டுவிட்டார்களாம். இந்த தகவலை கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த பாடலை “ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே” என்றுதான் ரசிகர்கள் இன்று வரை பாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.