விஜயின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார் விஜயை பற்றி ஒரு சேனலில் அவருடைய ஆதங்கத்தை பேசியிருக்கிறார். தற்போது பிடி செல்வக்குமார் திமுகவில் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் விஜய் சினிமாவில் நுழையும் போது தன் மகனை எப்படியாவது ஹீரோ அந்தஸ்து உள்ள நடிகராக மாற்ற வேண்டும் என அவரது அப்பா எஸ்.ஏ. சி கடுமையாக உழைத்தார்.
அவருக்கு இணையாக விஜயை புரோமோட் செய்ய உழைத்தவர் அவரது முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார். ஆரம்பத்தில் செல்வக்குமார் ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து வந்தார். நாளைய தீர்ப்பு படத்திலிருந்தே விஜய்க்கு பி.ஆர்.ஓ-வாக மாறினார் செல்வக்குமார். அவரை நியமித்தவர் எஸ்.ஏ.சிதானாம். அதிலிருந்தே விஜயை ஒவ்வொரு காலகட்டத்தில் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல உதவினார் செல்வக்குமார்.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் விஜயுடனேயே பயணித்திருக்கிறார் செல்வக்குமார். விக்கிரவாண்டியில் பெரிய மாநாட்டை நடத்தினார் விஜய். ஆனால் அதற்கு முன்பே மதுரையில் பெரிய அளவில் விஜய்க்காக மாநாட்டை நடத்தியிருக்கிறார் செல்வக்குமார். வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு வெட்ட வெளியில்தான் நடந்ததாம். அதற்கு ஐடியா கொடுத்தவர் செல்வக்குமார்.

ரசிகர்கள் முன்னிலையில் நடத்தினால் எப்படி இருக்கும்? என எஸ்.ஏ.சியிடம் செல்வக்குமார் கேட்க, அதை நீயே பார்த்துக் கொள் என சொல்லிவிட்டாராம். அதன் பிறகு காவல்துறை அனுமதி எல்லாம் பெற்று மதுரை அந்த விழாவை நடத்தியிருக்கிறார்கள். அதுவே ஒரு பெரிய மாநாடு போல் இருந்ததாக செல்வக்குமார் அந்த பேட்டியில் கூறினார். அதுமட்டுமில்லாமல் ஈழத்தமிழர்களுக்காக விஜய் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
அதை முழுக்க முழுக்க வழி நடத்தியவர் செல்வக்குமார்தான். எப்படி வர வேண்டும்? என்ன மாதிரியான டிரஸ் அணிய வேண்டும் என்றெல்லாம் யோசித்து யோசித்து விஜய்க்காகவே வாழ்ந்திருக்கிறார் செல்வக்குமார். அந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது காலை 5 மணியிலிருந்து செல்வக்குமாரும் சாப்பிடவே இல்லையாம். போராட்டம் முடிந்து அங்கு இருந்த ஒரு சின்ன கடையில் ஒரு கொய்யாப்பழம் வாங்கி சாப்பிட்டாராம்.
ஆக விஜய் ஒன்னும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. பிறக்கும் போதே அவர் ஒரு வெற்றியாளராக பிறக்கவில்லை. திறமை இருந்தாலும் அந்த திறமையை புரோமோஷன் பண்ண வேண்டும் அல்லவா? அதற்கு பின்னாடி யாரெல்லாம் உழைத்தார்கள் என்பதையும் ரசிகர்கள் கவனிக்க வேண்டும். ஆனால் விஜய்யும் எந்த மேடையிலும் சொல்லமாட்டார் என்று செல்வக்குமார் கூறியிருக்கிறார்.
