சூப்பர் படத்தை மிஸ் பண்ண பார்த்த சூப்பர்ஸ்டார்…! இயக்குனரிடம் அப்படியா கேட்டாரு?

Published on: March 10, 2026
rajnikanth

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்டைல் மட்டும் தான் தெரியும் நடிப்பு எல்லாம் வராது என்று சொல்பவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும் ரஜினியால் இப்படி கூட நடிக்க முடியுமா என்று? அவ்வளவு அற்புதமான படம்.

அதுதான் ஆறிலிருந்து அறுபது வரை. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேரக்டராகவே வாழ்ந்து இருப்பார். வழக்கமான ஸ்டைல், பஞ்ச் டயலாக் எல்லாம் கிடையாது.

1979ல் பஞ்சு அருணாசலம் கதை எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியானது இந்தப் படம். ரஜினிக்கு ஜோடியாக படாபட் ஜெயலட்சுமி நடித்துள்ளார். சோ, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் கண்மணியே காதல் என்பது, வாழ்க்கையே வேஷம், ஆண்பிள்ளை என்றாலும் என முத்து முத்தான பாடல்கள் உள்ளன.

இந்தப் படத்தின் போது ரஜினிகாந்த் திடீரென பாதிப் படத்தின்போது நடிக்காமல் தயங்கிக் கொண்டே இருந்துள்ளார். இதுக்கு என்ன காரணம்னு படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சில ஆச்சரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

ஆறிலிருந்து அறுபது வரை படத்துல தான் எனக்கும் ரஜினிக்கும் ஒரு பிரச்சனை வந்தது. அது வெறும் படம் அல்ல. எங்க வாழ்க்கையில நடந்த சம்பவங்களின் தொகுப்பு. பாதி படம் நடிச்சிக்கிட்டு என்ன சார் தம்பி, தங்கைக்கு இவ்ளோ உதவி செய்றேன். இப்படி நன்றி கெட்டத்தனமா பண்ணுவாங்களா? இதுல ஏதோ லாஜிக் இடிக்குதுன்னு சொன்னார்.

அப்புறம் நானும் பஞ்சு அருணாச்சலமும் ஒரு 5000 அடி எடுத்து காமிக்கிறோம். அதைப் பாரு. உனக்குப் புடிக்கலைன்னா கதையை மாத்திடலாம்னு சொன்னோம். சொன்ன மாதிரி எடுத்து காமிச்சதுக்கு அப்புறம் எங்களை அப்படியே கட்டிப் புடிச்சிக்கிட்டு சார் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ண பார்த்தேன். நீங்க என்னை சரியா வழி நடத்திட்டீங்கன்னு சொன்னார் ரஜினி என்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.