நாடகத்தில் சிவாஜிக்கு கிடைத்த அந்த வேடம்!. ஆனாலும் ரசித்து செய்து கைத்தட்டலை வாங்கிய நடிகர் திலகம்..

Sivaji
ராமாயணம் நாட்டின் பழம்பெரும் இதிகாசம். பொக்கிஷமும் கூட. இன்று வரையும் நமக்குக் கொஞ்சமும் அலுப்பு தட்டாத ஒரு புராணம் உண்டு என்றால் அது ராமாயணம் தான். இந்தக் கதையைத் தழுவி தமிழில் சம்பூர்ண ராமாயணம், லவகுசா என பல படங்கள் வந்துவிட்டன. தமிழ்சினிமாவின் தவப்புதல்வன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் ஆரம்பகாலகட்டத்தில் சீதை வேடத்தில் நாடகங்களில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். அவர் தனக்கு கிடைத்த ஆரம்ப காலகட்டங்களில் தனக்குக் கிடைத்த அபாரமான அந்த வேடம் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
ராமாயணத்தில் சீதை வேடத்தில் நடித்ததும் சிவாஜிக்கு அபாரமான புரோமோஷன் கிடைத்ததாம். ஆனால் அது வரை அவர் தனக்கு ஏதாவது ஒரு ஆண் வேடம் தான் கிடைக்கும். நன்றாக நடித்து எப்படியாவது பெயர் எடுத்து விடலாம் என்று நினைத்தாராம். ஆனால் அவருக்குக் கிடைத்ததோ பெண் வேடமாம். எது இருந்தாலும் நடிகனாகிய பின் நமக்கு ஏன் இந்தக் கவலை? எந்த வேடத்தையும் ரசித்து சிறப்பாக செய்வது தானே அவனது வேலை என்று கிடைத்த வேடத்தில் நச்சென்று நடித்து அசத்தினாராம் நடிகர் திலகம். அதற்கு பெரிய வரவேற்பும் கிடைத்ததாம்.

SR
அடுத்தடுத்த நாடகங்களில் அவருக்கு சூர்ப்பனகை வேடமும் கிடைத்ததாம். அது மட்டுமல்ல. ராமாயணத்தில் சீதையின் கதாபாத்திரத்தை விட அதிமுக்கியத்துவம் வாய்ந்தது சூர்ப்பனகையின் வேடம் தான் என்கிறார் நடிகர் திலகம். அது எப்படி என்று கேட்டால் அதற்கு இப்படி பதில் சொல்கிறார் சிவாஜி. என்னைப் பொறுத்தவரை சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். ஏன்னா அதுவரையிலும் ராமாயணம் என்றாலே சீதைக்கு 3 காட்சிகள் தான் வரும்.
இதையும் படிங்க... டாக்டர் சொல்லியும் கேட்காம நடிச்சி ரத்த வாந்தி எடுத்த சிவாஜி!.. டெடிக்கேஷன்னா நடிகர் திலகம்தான்!..
இந்தக் கதாபாத்திரத்தைப் போட்டு திறமை காட்ட அந்த அளவுக்கு சந்தர்ப்பங்கள் இல்லை. ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி கிடையாது. அழகு சுந்தரியாக அவள் வந்து லட்சுமணனை மயக்க வேண்டும். ஆடிப் பாட வேண்டும். அவனுடன் கொஞ்ச வேண்டும். லட்சுமணன் அவளை மூக்கறுக்கும் போது அவள் கோபத்துடன் செல்ல வேண்டும். ஆடல், பாடல், காதல், கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் அந்த வேடத்தில் தான் வெளிப்படுத்த முடியும்.
அதனால் ஒரு நடிகன் என்ற முறையில் நல்ல வேடமாக எனக்கு சூர்ப்பனகை வேடம் தான் எனக்குப் பெரிதாகத் தோன்றியது. அதனால் தான் அந்த வேடத்தை எனக்கு தரும்போது பெருமையாக இருந்தது. சாதாரணமாக அந்த வேடத்தை மூக்கு முழியுடன் லட்சணமாக இருப்பவர்களுக்குத் தான் கொடுப்பார்கள். நானும் அப்படி இருந்ததால் தான் எனக்கு தந்து இருக்கிறார்கள் என்ற போது எனக்கு பெருமையாகவே இருந்தது.
லட்சுமணனை மயக்க வேண்டும் சூர்ப்பனகை. அதற்காக கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து விட்டு பாட வேண்டும். அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே நாடக அரங்கில் கைதட்டல் காதைக் கிழிக்கும் என்கிறார் நடிகர் திலகம்.