Cinema History
மக்களுக்காக சிவாஜி அள்ளிக்கொடுத்தது இம்புட்டு கோடியா?? நிஜ வாழ்க்கையிலும் கர்ணனா இருந்துருக்காரே!!..
நடிகர் திலகமாகவும் நடிப்புக்கே பல்கலைக்கழகமாகவும் விளங்கிய சிவாஜி கணேசன், தனது அசரவைக்கும் நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனித்த ஒரு இடத்தை பிடித்தவர். இவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கிடையேயும் பல வித்தியாசங்களை காட்டுவார். அந்த அளவுக்கு பல நடிகர்களின் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
தனது அசாத்தியமான நடிப்பிற்காக பதம்ஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே உட்பட பல கௌரவ விருதுகளை வாங்கி குவித்தவர் சிவாஜி கணேசன். குறிப்பாக இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
இவ்வாறு தமிழ் சினிமாவின் பல பெருமைகளுக்குச் சொந்தகாரராக திகழ்ந்த சிவாஜி கணேசன் மீது எப்போதும் ஒரு தீவிர விமர்சனம் ஒன்று நிலவி வருகிறது. அதாவது அவர் யாருக்கும் அவ்வளவாக பண உதவி செய்ததில்லை என்ற விமர்சனம்தான் அது. சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் வள்ளலாக புகழப்பட்டார். அதே போல் தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன், ஜெய்சங்கர் ஆகியோரும் பெரும் வள்ளல்களாக புகழப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிவாஜி வள்ளலாக புகழப்பட்டது இல்லை.
இந்த நிலையில் சிவாஜியின் வள்ளல் தன்மை குறித்து இதுவரை யாருமே அறியாத தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அதாவது டாக்டர் மருதுமோகன் என்பவர் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக வெளியிட உள்ளாராம். அந்த வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் சிவாஜியின் கொடை தன்மை குறித்த ஒரு ஆச்சரியமான தகவலை பதிவு செய்துள்ளாராம்.
அதாவது சிவாஜி தனது வாழ்நாளில் இந்த நாட்டுக்காக தனது சொந்த பணத்தில் இருந்து வாரி வழங்கியது தற்போதைய நிலவரப்படி 310 கோடிகள் என கூறப்படுகிறதாம். இந்தியா-பாகிஸ்தான் போர் நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கங்களை சிவாஜி கணேசன் வாரி வழங்கியுள்ளாராம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதன் மூலம் சிவாஜி கணேசன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.