சாக்கடை ஓரத்தில் நின்று சினிமா கற்ற டி.ஆர்!... இளையராஜாவுக்கே டஃப் கொடுத்த சகலகலா வல்லவன்!..

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களின் எண்ணிக்கை சொற்பமே. திரைத்துறையில் தனது திறமையை காட்டி, அதன் மீது மட்டுமே கவனம் செலுத்தி அதில் வென்றவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் ஏராளம்.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்பட்டவர் டி.ராஜேந்தர். இசையமைப்பாளராக,இயக்குனராக, தயாரிப்பாளராக, எடிட்டராக, வசனகர்த்தாவாக, எழுத்தாளராக, பாடல் ஆசிரியர் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் டி. ராஜேந்தர். இன்றைய தலைமுறைக்கு டி ராஜேந்தர் என்று சொல்வதை விட "லிட்டில் சூப்பர் ஸ்டார்", எஸ்.டி.ஆர் - சிலம்பரசன் என்ற சிம்புவின் அப்பா என்று சொன்னால் மட்டுமே தெரிய வரும்.

இளையராஜா இருந்தபோதே அவருக்கு டஃப் கொடுத்தவர் இவர். அண்ணன் - தங்கை பாசம் என்றால் அது இவர் படங்கள் தான். எனக்கு சினிமா துறை தான் மிகவும் பிடிக்கும், நான் சினிமா துறையில் சாதனைகளை செய்ய என்னை தயார்படுத்தி வருகிறேன் என்று தனது நண்பர்களிடம் நம்பிக்கையோடு அந்த நாட்களிலேயே சொல்லியவர்.

இவருக்கு சினிமா மீது எப்பொழுதுமே மோகம் கொஞ்சம் அதிகம் தான். ஒரு திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு செல்ல பணம் இல்லாத நேரத்தில், அவரது சொந்த ஊரான மாயவரத்தில் உள்ள "டியர்லெஸ்" என்ற திரையரங்கின் அருகே ஒரு சாக்கடை ஒன்று ஓடுமாம், அதன் அருகே நின்று கேட்டால் படத்தில் வசனங்கள் எல்லாம் ஓரளவு கேட்குமாம்.

T.R

T.R

அந்த இடத்திலேயே நின்று புது படங்கள் வெளியாகும் போது அங்கு நின்றவாரே படத்தினுடைய வசனங்களை கேட்பாராம். அதே காட்சிக்கு இவரது பாணியில் வசனங்களை உச்சரிப்பாராம். இதனை பார்த்தவர்கள் இவருக்கு ஏதோ ஆகிவிட்டது. 'பித்து பிடித்து விட்டது' என கேலி, கிண்டல் செய்தார்களாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவருக்கு எது பிடிக்குமோ அதை செய்து வந்தார்.

ரயில் பயணங்களில் செல்லும் பொழுது அவர் பாடிய பாடல்கள் அருகில் இருக்கும் பயணிகளை ஈர்த்துள்ளது. பாடல் அருமையாக உள்ளதே.. இது எந்த படத்தில் வந்தது?.. இசையமைப்பாளர் யார்? என்றும் கேட்டார்களாம். அதற்கு டி.ஆர் ‘இதுவரை எந்த திரைப்படத்திலும் வரவில்லை. இது நானே எழுதி இசையமைத்த பாடல் நேரத்தை போக்குவதற்காக பாடுகிறேன், பாடல் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று’ என்று சொல்ல அங்கிருந்து பயணிகள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்களாம்.

"ஒரு தலை ராகம்" படத்தின் மூலம் தமிழ் சினமாவில் நுழைந்தவர். 1980 - 90 களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்களுக்கு பெரும் போட்டியாகவும், இசையில் இசைஞானி இளையராஜாவுக்கே சவால் கொடுக்கும் பாடல்களை எழுதி, ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story