விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரியத்தில் சிக்கி இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுப்பதாக சொல்லிவிட்டு திடீரென மறுதணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
முதலில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் மேல்முறையீட்டு மனுவில் தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தணிக்கை வாரியத்திற்கு ஆதரவாகவே இன்று தீர்ப்பு வந்திருக்கிறது.. அதன்படி இந்த வழக்கை மீண்டும் தனிநீதிபதி விசாரிக்க வேண்டும்.. இந்தமுறை தணிக்கை வாரியம் பதிலளிக்க போதுமான காலஅவகாசம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.
எனவே ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.. ஒருபக்கம் படத்தை வாங்கிய தியேட்டர் அதிபர்கள் தங்கள் பணத்தை திருப்பி கொடுக்குமாறு தியேட்டர் அதிபர்கள் விநியோகஸ்தர்களை கேட்க துவங்கி விட்டார்களாம்.
படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாத நிலையில் தங்கள் கொடுத்த பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுங்கள் என தியேட்டர் அதிபர்கள் வினியோகஸ்தர்களிடம் கேட்பதாக தெரிகிறது.
ஜனநாயகன் படம் தியேட்டரில் ஓடி வரும் லாபத்தில் தங்களுக்கு 80 சதவீதம், தியேட்டர் அதிபருக்கு 20 சதவீதம் என சில விநியோகஸ்தர்கள் பேசியிருக்கிறார்கள். சில வினியோகஸ்தர்கள் தங்களுக்கு 75 சதவீதம் தியேட்டருக்கு 25 சதவீதம் என பேசியிருக்கிறார்கள். எனவே பல லட்சங்களை தியேட்டர் அதிபர்கள் விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார்கள்.
தற்போது ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை என்பதால் அதற்கெல்லாம் வட்டி கட்டிக் கொண்டிருக்கும் தியேட்டர் அதிபர்கள் ‘ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியான பின் லாபத்தில் 25 சதவீதம் தரவேண்டும் என கேட்கிறார்களாம். அதேபோல் 25 சதவீதம் என பேசிய தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு 30 சதவீதம் கொடுக்க வேண்டும் என கேட்கிறார்களாம். மொத்தத்தில் ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை வியாபாரத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது.





