காதலுக்காக ஏங்கும் நாயகிகளின் கதையில் ஹீரோ செய்த புதுமை!.. பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அழகன்

1991ல் பாலசந்தர் இயக்கத்தில் உருவான ஒரு அழகான படம் அழகன். மம்முட்டி அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். ஓட்டல் அதிபராக நடிக்கும் மம்முட்டி ரொம்பவே ஸ்மார்ட்டாக நடித்து அசத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் ஈவ்னிங் காலேஜ் படிக்கும் மாணவராகவும் வருவார். இவர் மேல் 3 பெண்களுக்குக் காதல் வந்து விடுகிறது. அவர்கள் தங்கள் மன விருப்பத்திற்கு ஏற்ப அவரிடம் தன் காதலை வெளிப்படுத்துகின்றனர்.

மம்முட்டியோ பானுப்பிரியாவை மட்டுமே காதலிக்கிறார். கீதா காதலைச் சொல்லும்போது மம்முட்டி பெண்கள் மீது மரியாதை வைத்துள்ளதாகச் சொல்வார். அதுமட்டும் அல்லாமல் தான் ஒழுக்கமான பொறுப்பான ஆண்மகன் என்று காட்டிக் கொண்டு அவரது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்.

பானுப்பிரியா, மம்முட்டியின் காதல் காட்சிகள் படத்தில் அழகான ஓவியம் போல நயமாகக் காட்டியிருப்பார்கள். அவர்களின் காதல் ரசங்களைச் சொட்ட சொட்ட இயக்குனர் சிகரம் பாலசந்தர் சங்கீத ஸ்வரங்கள் என்ற பாடலில் வடித்திருப்பார்.

Azhagan1

இளையராஜாவின் இன்னிசையில் பாடல் ரசனையைத் தூண்டுவதாக அமைந்து இருக்கும். அதே போல் மழையும் நீயே என்று ஒரு பாடல் வரும். இந்தப் பாடலில் பானுப்பிரியா மம்முட்டியிடம் ஒரு இசைக்கருவியைப் பரிசாகக் கொடுப்பார். அதில் ஒரு துண்டுச்சீட்டையும் வைத்துக் கொடுப்பார். அதில் இசையை விட இனிமையானவருக்கு... ப்ரியங்களுடன் என்று எழுதி இருக்கும்.

இந்த வரிகளைப் படித்துப் பார்க்கும் மம்முட்டி தன் போட்டோவைப் பார்ப்பார். இனிமை என்ற அந்த வார்த்தையை நினைத்ததும் அவரது போட்டோவில் ஈக்கள் உட்கார்ந்து இருக்கும். இந்த இடத்தில் தான் பாலசந்தர் டச் தெரிகிறது. அதே போல மம்முட்டியும் என்னைப் புதுப்பித்த புதியவளுக்கு என்று ஒரு காரை பரிசளித்து இருப்பார். இந்தப் பாடலைப் பொறுத்தவரை அழகான காதல் ஜோடிக்கு சமர்ப்பணம் சொல்லும் விதத்தில் எடுக்கப்பட்டு இருக்கும்.

அடுத்ததாக மதுபாலாவின் இளமை துள்ளும் காதல். அவர் தன் காதலை ஒரு பாடலின் மூலம் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு வரியும் அவரது மனதை அழுத்தும். ஆனால் படத்தில் மம்முட்டியோ பாடலுக்கான பொருளை உணராமல் தொடர்ந்து கீபோர்டை வாசித்துக் கொண்டே இருப்பார். அதுதான் தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் பாடல்.

காதலில் விழுந்ததை வரி வரியாக விலாவாரியாக சொல்லி விட்டு பாடலின் இறுதியில் ஐ லவ் யூ என்று நேரடியாகவே சொல்வார். அதைக் கண்டதும் மம்முட்டி திகைத்து விடுவார். பின்னர் அவளிடம் பக்குவமாகப் பேசி இது வெறும் இனக்கவர்ச்சி என புரிய வைப்பார். உண்மையில் இவர் அழகன் அல்ல. பேரழகன்.

 

Related Articles

Next Story