அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட நடிகை என்றால் அது பானுமதி தான். பாடி நடிக்கக்கூடிய நடிகை இவர். நடிகை, பாடகி, எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் பானுமதி. இவர் இயக்கிய முதல் படம் சண்டிராணி.
இவர் தயாரித்த முதல் படம் ரத்னமாலா. இவர் நடித்த கடைசி படம் செம்பருத்தி. அழகான பொண்ணு நான், போறவளே போறவளே, அசைந்தாடும் தென்றலே, மாசிலா உண்மைக் காதலே, என் காதல் இன்பம், கண்ணிலே இருப்பதென்ன, கண்களின் வெண்ணிலவே போன்ற முத்து முத்தான பாடல்களைப் பாடியவர் பானுமதி தான்.

இவரைப் பொருத்த வரை தான் நடிக்கும் படங்களில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று பெயர் எடுப்பதை விட பாடி நடிப்பது தான் அவருக்குப் பிடித்தமான வேலை. அவர் நடிக்கின்ற எல்லாப் படங்களிலுமே பானுமதி பாடியிருப்பார்.
அவரிடம் வேலை வாங்குவது இசை அமைப்பாளர்களுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல. அந்த இசை அமைப்பாளர் போடும் டியூனுக்கு பானுமதி பாட மாட்டாராம். அந்த டியூனும், இசையும் இவருக்குப் பிடித்து இருந்தால் மட்டுமே பாடுவாராம்.
பெரும்பாலும் அந்த இசை அமைப்பாளர்களைத் தன் பக்கம் திருப்பக்கூடிய வல்லமை பானுமதிக்கு உண்டு. இது அந்த இசை அமைப்பாளர்களுக்கும் தெரியுமாம். அதனால் உங்களுக்குத் தெரியாததாம்மா… இது தான் டியூன். நீங்க பாடுங்கன்னு சொல்லி அவரது போக்கிலேயே போய் பாடலைக் கறந்து விடுவார்களாம்.
பானுமதியைப் பொருத்த வரை இன்னொரு சென்டிமென்ட்டும் இருக்கு. நான் பாடி நடித்த படங்கள் தான் வெற்றி பெறும். இல்லேன்னா அந்தப் படம் வெற்றி பெறாது. உதாரணத்திற்கு ராஜபக்தி, பூவும் பொட்டும் என்ற ரெண்டு படங்களையும் சொல்லலாம். அதனால் ரெண்டு படமும் ஓடவில்லை என்று பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்தாராம் பானுமதி.





