சூப்பர்ஸ்டார்னு தனக்கு கிடைக்கக் காரணமான படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். ஆயிரம் தான் இருந்தாலும் அவரைப் போய் மறக்கலாமா சூப்பர்ஸ்டார்...?

ரஜினியை சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்குக் கொண்டு வந்த படம் பைரவி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இயக்கியவர் எம்.பாஸ்கர். ஆனால் படத்தின் தயாரிப்பாளரை பலருக்கும் தெரிகிறது. இயக்குனரைத் தெரியவில்லை. இருட்டடிப்பு செய்யப்படுகிறதா என கொதித்து எழுகிறார் அவரது மகன் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

ரஜினி சாரை எப்படி எப்படி புரொமோட் பண்ண முடியுமோ அந்தளவுக்கு படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாரு. அப்பாவுக்கும் அதுதான் முதல் படம். அந்தப் படத்தை ஒருவேளை அப்பா சரியா எடுக்காம இருந்தா இன்னைக்கு இவ்வளவு பெரிய ஹீரோவா ரஜினி மாறியிருப்பாரா..?

அப்படின்னா ஒரு படத்துக்கு இயக்குனர் எவ்வளவு முக்கியம்? அப்பாவைப் பத்தி ரஜினி எதுவுமே இதுவரைக்கும் எந்த மேடையிலும் சொல்லல. அப்பா எதையும் எதிர்பார்க்கல. அவர் வாழ்ந்த காலத்துல எதையும் எதிர்பார்க்குல. அவர் இறந்து 11 வருஷமாச்சு. ஆனா அவரோட வாரிசுகளான நாங்க எதிர்பார்க்குறோம். அவரு சொல்லாதது எங்களுக்கு வருத்தமா இருக்கு.

நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அந்தப் படத்தோட தயாரிப்பாளர் தாணுவுக்கு பாராட்டு விழா நடந்தது. அந்தப் படத்துல ரஜினியை அறிமுகப்படுத்துனதனால தயாரிப்பாளருக்கு பாராட்டு விழா நடந்தது. எனக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவுல ரஜினியும் அப்பாவைப் பற்றி சொல்லல. தயாரிப்பாளரும் சொல்லல.

அந்த விழாவுல மெயின் டாபிக் பைரவி பத்தித் தான். ஆனா ரஜினி சாரும் டைரக்டரைப் பத்தி சொல்லல. அவராவது சொல்லியிருக்கலாம். எனக்கு அந்த மேடையில எங்கயாவது அப்பா பத்தி பேசுவாங்க.

ரஜினி சார், தயாரிப்பாளர் பேசுவாங்கன்னு நினைச்சேன். இவங்க ரெண்டு பேரும் ஏதாவது ஒரு இடத்துல இந்தப் படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர் தான்னு சும்மா கோடிட்டு காமிச்சிருக்கலாமே. அதைக் கூட சொல்றதுக்கு ஏன் தயங்குறீங்க?

அப்போ இதுல ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கத் தானே செய்யுது. ஒரு டைரக்டர் இல்லாம ஒரு படம் வந்துடுமா? எவ்வளவு தான் பணம் செலவழிச்சாலும் டைரக்டர் தான அதை எடுக்க முடியும். இயக்குனர் மகேந்திரன் எடுத்த படம் முள்ளும் மலரும்.

அதுல ரஜினி பேசுவாரு ஒரு டயலாக். சரத்பாபு சொல்வாரு. ‘வேலை இனிமே கிடைக்காது’ன்னு சொல்வாரு. ‘ரெண்டு கையும் இல்லன்னாலும், ரெண்டு காலும் இல்லைன்னாலும் பொழைச்சிக்குவான் சார் இந்தக் காளி. கெட்ட பய சார் இந்தக் காளி’. டைரக்டர் அந்தக் கேரக்டரை அமைச்சி கரெக்டா பண்ணதனால அந்தக் கேரக்டர் இன்னும் நிக்குது.

அதே மாதிரி ‘மூக்கையன்’கற கேரக்டரை கமர்ஷியலா வச்சி ஹீரோவா அவரை புரொமோட் பண்ணுனது அப்பா. 46 வருஷமா நான் பார்த்துக்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் ரஜினி சார் சொன்னது இல்ல. அது ஏன்னு எனக்குப் புரியல. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

ரஜினி சாருக்கும், அப்பாவுக்கும் பிரச்சனை இருந்த மாதிரி எனக்குத் தெரியல. அப்பா ஸ்ட்ரிக்ட். அப்பாவோட இறுதிச்சடங்குக்குக் கூட வரல. பைரவி படத்துல உள்ள டைரக்டரை மாற்றி சொல்லிடுவீங்களா? அப்படின்னா டைரக்டர் தான அறிமுகப்படுத்துனாருன்னு அர்த்தம். அபூர்வ ராகங்கள்ல பாலசந்தர் அறிமுகப்படுத்தினாருன்னு சொல்றாரு.

ஆனா அந்தப் படத்தோட தயாரிப்பாளர் யாருக்காவது தெரியுமா? முள்ளும் மலரும் படத்துல டைரக்டர் மகேந்திரன் எனக்கு வித்தியாசமான படம் கொடுத்தார். ஆனா அந்தப் படத்தோட தயாரிப்பாளர் யாருன்னு தெரியாது. ஆனா இங்க மட்டும் ஏன் முரணா இருக்கு. பைரவி படத்தோட தயாரிப்பாளர் யாருன்னு தெரியுது.

ஆனா சூப்பர்ஸ்டாரா அறிமுகப்படுத்துன இயக்குனரை ஏன் யாருக்கும் தெரிய மாட்டேங்குது? ஏன் இந்த ஓரவஞ்சனை? என் ஆதங்கமானது நியாயமானது இல்லையா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *