Connect with us

latest news

வள்ளுவருக்கு இணையானவர் வாலி… அசத்தலாகப் பாடி வியக்க வைத்த வடிவேலு!

‘வாலிபக்கவிஞர்’ வாலிக்கு பாராட்டு விழா ஒன்றில் வைகைப்புயல் வடிவேலு கலந்து கொண்டு அவரை வாழ்த்தி சில தகவல்களைச் சொன்னார். அப்படி என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா… வாலி அய்யாவோட பாட்டைக் கேட்டு மனசுல பதிய வச்சவன். எம்ஜிஆர், சிவாஜில இருந்து எனக்கு வரைக்கும் எழுதித் தள்ளிருக்காரு. அடிநாக்குல பகையை வச்சிக்கிட்டு நுனிநாக்குல உறவு கொண்டாடுவான்.

தோள்ல ஒரு பக்கம் கையைப் போட்டுருப்பான். இன்னொரு பக்கம் குழியை பரபரன்னு தோண்டிக்கிட்டு இருப்பான். டக்குன்னு உள்ள தள்ளிவிட்டு மேல அரளிச்செடியை ஊன்றிட்டுப் போயிடுவான். நாம பார்த்திருப்போம். அண்ணேன் உங்களை மாதிரி யாரு? நீங்க எங்கேயோ போயிட்டீங்கண்ணேன்னு சொல்வான்.

நாமளும் இவரு ஒருத்தர்தானே நம்மளை இப்படி புகழ்றாருன்னு நினைப்போம். அவனோ வேற ஒரு ஆளுக்கிட்ட போய் நம்மளைப் பத்தி இல்லாததெல்லாம் சொல்லி நம்மை சோலியை முடிச்சிட்டுப் போயிடுவான். எல்லா மக்களும் அனுபவிச்ச விஷயம் இது. இந்த கான்செப்ட்டுக்குத் தான் வாலி இப்படி பாட்டு எழுதிருக்காரு.

”உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன்… ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன்… உலகத்தில் கோழைகள் தலைவன்… நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல… நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல…” ன்னு வாலி அழகா எழுதிருக்காரு.

ஓசிலயே தின்னுக்கிட்டு இருப்பான் ரெண்டு பேரு. ஒருத்தன் வேலைக்குப் போகமாட்டான். இன்னொருத்தன் எல்லாம் ஏமாற்றுவேலையா இருப்பான். அவனைத் தான் வாலி சொல்றாரு. ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன்னு சொல்றாரு. அதே போல அதே பாடலில் பசியில் உணவாகவும், பகையில் துணையாகவும் இருக்கணும். அவன்தான் நண்பன்னு சொல்லிருக்காரு.

அதே மாதிரி ஒவ்;வொரு மனிதருக்கும் வீட்டுப்பற்று மட்டும் இருக்கக்கூடாது. நாட்டுப்பற்றும் இருக்கணும். அப்பத்தான் வீடு முன்னேறுற மாதிரி நாடும் முன்னேறும். அவரு திருவள்ளுவர் மாதிரி. நல்ல அழுத்தி எழுதி வச்சிருக்காரு.

”நான் ஏன் பிறந்தேன்.. நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்… இந்த நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா… நினைத்து செயல்படு என் தோழா… நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு?” என்று நினைத்தால் நன்மை உனக்குன்னு என மேடையில் வாலியை வாழ்த்தும் வகையில் அழகாகப் பாடி அசத்தினார் வைகைப்புயல் வடிவேலு.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top