சென்னை வடபழனி சாலையில் அமைந்துள்ள ஏவிஎம் திரையரங்கம் கோலிவுட்டின் அடையாளமாக திகழ்கிறது. 1970ம் வருடம் ஏவிஎம் ஸ்டுடியோ அருகிலேயே இந்த திரையரங்கம் நிறுவப்பட்டது.
சென்னையில் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வந்துவிட்டாலும் வடபழனி, சாலிகிராமம், கே.கே நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர் நகர் போன்ற பகுதியில் வசிக்கும் நடுத்தர மக்களின் தேர்வாக ஏவிஎம் திரையரங்கம் இருந்தது.
அதற்கு காரணம் பழமை மாறாத கட்டிடத்தோடு ஏசி வசதியும் இருப்பதோடு டிக்கெட் விலையில் மிகவும் குறைவாக விற்கப்பட்டு வந்தது. இந்த தியேட்டரில் 50, 60, 100 இதுதான் அதிகபட்ச விலை. எனவே நடுத்தர வர்க்க மக்களின் தேர்வாக ஏவிஎம் திரையரங்கம் இருந்து வந்தது.
இந்த திரையரங்கில் விற்கப்படும் உணவு பண்டங்களும் மிக குறைவான விலையிலேயே விற்கப்பட்டு வந்தது. ஆனாலும் புது படம் வெளியானால் மட்டுமே இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட்டமிருப்பதாகவும், அதன்பின் 20, 30 பேர் மட்டுமே படம் பார்க்க வருவதாகவும் சொல்லப்பட்டது. கைக்காசு போட்டு இந்த தியேட்டரை நடத்த முடியாது என்பதால் தியேட்டரை இடித்து விடலாம் என ஏவிஎம் நிர்வாகம் 3 வருடங்களுக்கு முன்பே முடிவெடுத்தது.
ஆனால் அதற்கான வேலைகள் துவங்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை இந்த திரையரங்கை இடிக்கும் பணி துவங்கியிருக்கிறது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் வரலாம் என கணிக்கப்படுகிறது. பலருக்கும் பிடித்த ஏவிஎம் திரையரங்கம் இடிக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏவி மெய்யப்ப செட்டியார் மிகவும் ஆசையோடு கட்டிய திரையரங்கம் இது. இப்போதுள்ள நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதால் சிவாஜிக்கு பின் திரைப்படங்களை தயாரிப்பதையே ஏவிஎம் நிறுவனம் நிறுத்துவிட்டது. அதோடு ஏற்கனவே ஏவிஎம் ஸ்டுடியோவின் பெரும்பாலான பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
