சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் மிஷ்கின். வித்தியாசமாக கதை சொல்லும் ஸ்டைல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.
அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

கடந்த பல வருடங்களாகவே மிஷ்கின் திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டார். அவருக்கென கதாபாத்திரங்களை இயக்குனர்களும் உருவாக்கி வருகிறார்கள்.தனிப்பட்ட முறையில் மிஷ்கின் ஒரு தீவிரமான இளையராஜா ரசிகர். ரசிகர் என சொல்வதைவிட இளையராஜா வெறியர் என்றும் சொல்லலாம். இளையராஜாவை கடவுளை போல பாவிப்பவர் மிஷ்கின். அவர் இயக்கிய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார்.

பாடல் உருவாகும்போது இளையராஜாவிடம் மிஷ்கின் அடிக்கடி சண்டை போடுவதுண்டு. நான்தான் இயக்குனர்.. எனக்கு பிடித்தது போல பாட்டு போட்டு கொடுங்கள் என உரிமையாக அவர் இளையராஜாவிடம் சண்டை போடுவார். அது இளையராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்த அது வாக்குவாதத்தில் முடியும். அப்படி பலமுறை நடந்திருப்பதாக மிஷ்கின் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய மிஷ்கின் ‘இளையராஜா சாரை நான் அப்பா என்றுதான் கூப்பிடுவேன். ஒரு நாள் ஒரு பாட்டு சம்பந்தமாக எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் போயிட்டே இருந்தது. ரெண்டு பேரும் சண்டை போட்டோம்..கொஞ்ச நேரம் கழிச்சு என்னை கூப்பிட்டாரு.. ‘என்ன அப்பா?’ னு கேட்டேன்.. ‘யோவ் நீ என்ன எனக்கா பொறந்த?.. என்ன அப்பான்னு கூப்பிடாத’ அப்படின்னு சொல்லிட்டாரு. ஒரு மணி நேரம் அங்கேயே நின்னு அழுதேன். நான் ரொம்ப உடைஞ்சு அழுதது அதுதான்’ என சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *