
தமிழ் சினிமாவில் பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.சுந்தர்ராஜன். அதன்பின் பல திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்
. சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள், சுகமான ராகங்கள், குங்குமச்சிமிழ், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன..
ரஜினியை வைத்து ராஜாதி ராஜா என்கிற படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.. விஜயகாந்தை வைத்து வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, எங்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். அதன்பின் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடிக்க துவங்கினார் சுந்தர்ராஜன். தற்போது சீரியலிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்ராஜன் ‘நான் பயணங்கள் முடிவதில்லை கதையை எழுதிவிட்டு நண்பர் ஒருவருடன் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக சென்றேன்..

அப்போது தயாரிப்பாளர் சாப்பிடுவதற்காக வடையும், டீயும் வந்தது. ‘இந்த வடையையும் டீயும் சாப்பிட்டு முடிப்பதற்குள் நீ கதையை சொல்லிவிடு’ என்றார்.. நானும் சொல்லத் தொடங்கினேன்.. கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு ‘கதை நன்றாக இருக்கிறது.. படமாக எடுக்கலாம்’ என்றார்.
முதலில் என்னை கதை வசனம் எழுத மட்டுமே பயன்படுத்த நினைத்தார்கள்.. முதல்படம் என்பதால் நானும் அதற்கு ஒற்றுக்கொள்ள தயாராகவே இருந்தேன்.. ஆனால் ‘அவருடைய கதை அவரே இயக்கினால்தான் சரியாக இருக்கும்.. கதையை கொடுக்கமாட்டோம்’ என நண்பர் சொல்ல தயாரிப்பாளர் ‘நீயே படத்தை இயக்கு’ என சொல்லிவிட்டார்’ என கூறியிருக்கிறார்.

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
