எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பல ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெய்சங்கர். பள்ளி பருவத்திலேயே சினிமாவின் மீது காதல் கொண்டிருந்த ஜெய்சங்கர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு நாடகத்துறையில் கால் எடுத்து வைத்தார்.
நாடகத்துறையில் ஜெய்சங்கர்
ஜெய்சங்கரும் சோ.ராமசாமியும் பல காலமாக மிகவும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தவர்கள். இந்த நெருங்கிய நட்பின் காரணமாக சோ.ராமசாமியின் நாடக கம்பெனியில் பல நாடகங்களில் ஜெய்சங்கர் நடித்துள்ளார். ஜெய்சங்கர் நடித்த பல நாடகங்களை எம்.ஜி.ஆர் பார்த்து அவரின் நடிப்புத் திறமையை பாராட்டியும் உள்ளார்.
முதல் திரைப்படம்
1965 ஆம் ஆண்டு “இரவும் பகலும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜெய்சங்கர். தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வாய்ப்பு தேடிச் சென்றபோது ஜெய்சங்கருக்கு குட்டி கண்கள் என்பதால் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் “இரவும் பகலும்” திரைப்படத்தின் இயக்குனர் ஜோசஃப் தெலியத், ஜெய்சங்கரின் குட்டி கண்களை பார்த்து, இந்த படத்திற்கு இப்படி ஒரு நபர்தான் சரியாக இருப்பார் என அவரை நடிக்க வைத்தாராம். இவ்வாறு அவரது குட்டி கண்களின் காரணமாக பறிபோன வாய்ப்பு, மீண்டும் அவரது குட்டி கண்கள் காரணமாகவே தேடி வந்திருக்கிறது.
ஜெய்சங்கரை நோகடித்த ரசிகர்
ஜெய்சங்கர் மிகப் புகழ்பெற்ற நடிகராக வளர்ந்து வந்தபின் அவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத நகைச்சுவையான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இச்சம்பவத்தை குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஒரு முறை ஜெய்சங்கர் மனைவியின் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த திருமணத்திற்கு வருமாறு பல பிரபலங்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வைத்து வந்தார் ஜெய்சங்கர். அப்போது ஒரு நாள் ஒரு அமைச்சரின் வீட்டிற்கு சித்ரா லட்சுமணனும் ஜெய்சங்கரும் இணைந்து பத்திரிக்கை வைக்க சென்றிருக்கின்றனர்.
அந்த அமைச்சரின் வீட்டில் பந்தோபஸ்துக்கு இருந்த ஒரு போலீஸ்காரர், ஜெய்சங்கரை பார்த்து சல்யூட் அடித்தாராம். அதனை பார்த்த ஜெய்சங்கர் “நமக்கு இப்படி ஒரு ரசிகரா?” என பூரித்துப் போனாராம்.
அதன் பின் அமைச்சரின் வீட்டிற்குள் சென்று பத்திரிக்கை வைத்துவிட்டு வெளியே வரும்போது அந்த போலீஸ்காரர் மீண்டும் சல்யூட் அடித்தாராம். அப்போது அந்த போலீஸ்காரரை நலம் விசாரித்த ஜெய்சங்கர் “நான் நடித்த திரைப்படங்களில் எந்தெந்த திரைப்படங்களை பார்த்திருக்கிறாய்?” என கேட்டாராம்.
அதற்கு அந்த போலீஸ்காரர் “நீங்க நடிச்ச காதலிக்க நேரமில்லை படத்தை மட்டும் பத்து தடவை பார்த்திருக்கிறேன் சார்” என கூறினாராம். இதனை கேட்டதும் ஜெய்சங்கர் நொந்துப்போய்விட்டாராம்.
இதையும் படிங்க: “லவ் டூடே இயக்குனர் செய்த தவறை ஒரு காலத்தில் வைரமுத்துவும் செய்தார்”… குண்டை தூக்கிப்போட்ட பிரபல தயாரிப்பாளர்…
நமக்கு இது தேவைதானா??
“காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் நடித்தது ரவிச்சந்தரன். ஆனால் அந்த போலீஸ்காரர் ஜெய்சங்கரை, ரவிச்சந்தரன் என நினைத்து அப்படி கூறினாராம். போலீஸ்காரர் அவ்வாறு கூறியதும் “நமக்கு இது தேவைதானா?” என அந்த தருணத்திலும் சித்ரா லட்சுமணனிடம் நகைச்சுவையாக புலம்பினாராம் ஜெய்சங்கர்.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…