ரெய்டு வந்தா நமக்கென்ன!.. கையில் 12 படங்கள்!.. வரிசை கட்டி அடிக்கும் தனுஷ்!...
Actor Dhanush: தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருபவர் தனுஷ். பொதுவாக நடிகர்கள் ஒரு படத்தை நடித்து முடித்துவிட்டு சில நாட்கள் இடைவெளி எடுப்பார்கள். அதிலும் 6 மாதங்கள் ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடித்தால் குடும்பத்துடன் சில நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போய்விடுவார்கள்.
ஆனால், தனுஷ் அப்படி இல்லை. ஒரு படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான கதைகளை எழுதுகிறார். ஏனெனில், இப்போதெல்லாம் அவர் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். ராயன் படத்தை இயக்கினார். அந்த படம் ஹிட் அடித்த உடனேயே இட்லி கடை படத்தை துவங்கினார்.
இந்த படத்தை உதயநிதிக்கு நெருக்கமான ஆகாஷ் பாஷ்கரன் என்பவர் தயாரித்தார். இவர்தான் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் தயாரிப்பாளரும் கூட. இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் நடந்தது. சில காரணங்களால் படப்பிடிப்பு தடை பட தனுஷ் குபேரா எனும் தெலுங்கு படத்தில் நடிக்கப்போனார். மேலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். கிடைத்த இடைவெளியில் இட்லி கடை படத்தின் ஷூட்டிங்கை தனுஷ் முடித்துவிட்டார்.
இப்போது வருமானத்துறை அதிகாரிகள் ஆகாஷ் பாஷ்கரனை நெருங்கிவிட்டனர். சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் எங்கேயே பதுங்கி இருக்கிறார் ஆகாஷ் பாஷ்கரன். ஆனாலும், இட்லி கடை படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளை தனுஷ் துவங்கிவிட்டார். தனுஷின் கையில் இப்போது இட்லி கடை,குபேரா படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
இது இல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா, லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் போன்ற இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். இது இல்லாமல் இளையராஜா மற்றும் அப்துல்கலாம் ஆகியோரின் பயோபிக்கிலும் நடிக்கவிருக்கிறார்.
மேலும், வெற்றிமாறன், ஹெச்.வினோத், நித்திலன் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படி அவரின் கையில் 12 படங்கள் இருக்கிறது. இப்படி நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார் தனுஷ்.