தன் கல்லறை எப்படி இருக்க வேண்டும்? உயிருடன் இருக்கும் போதே கட்டி அழகு பார்த்த ராஜேஷ்
இன்று தமிழ் திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான ராஜேஷின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜேஷ் முதல் படமே இருநூறு நாட்களை தாண்டி ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதிலிருந்து அவருடைய சினிமா கிராஃபும் படிப்படியாக உயர்ந்தது.
ஹீரோவாக பல படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த ராஜேஷ் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரம் என தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அரசியல் தலைவர்கள் பழம்பெரும் திரைப்பட நடிகர்கள் என அனைவருடனும் நட்பாக பழகியவர் ராஜேஷ்.
தன்னுடைய எழுத்துக்கள் மூலமாகவும் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு தெரியாத எந்த விஷயங்களும் இல்லை என்று சொல்லலாம். திரைப்படங்களைப் பற்றியும் தமிழ் சினிமாவின் போக்கு வளர்ச்சி இவைகளை பற்றியும் எப்போது எந்த நேரத்திலும் ராஜேஷிடம் கேட்கலாம். அந்த அளவுக்கு சினிமா அனுபவம் வாய்ந்த ஒரு மகா கலைஞர் ராஜேஷ்.
இவருடைய மறைவு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல பிரபலங்கள் இவருக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்பே கட்டி அழகு பார்த்திருக்கிறார் ராஜேஷ். தன்னுடைய 40 வயதில் தனக்குத்தானே ஒரு கல்லறையை கட்டி அந்த கல்லறை எப்படி இருக்க வேண்டும் அதில் எந்த மாதிரி வசனங்கள் அமைய வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்தையும் செய்து இருக்கிறாராம் ராஜேஷ்.
அந்த செய்தி தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. இதற்கிடையில் அவருடைய தம்பியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவருடைய கடைசி நொடி பற்றியும் பகிர்ந்திருக்கிறார் .இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடைய உடல்நலம் கொஞ்சம் சரியில்லாமல் இருந்திருக்கிறது. மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவரை அழைத்து பல்ஸ் செக் பண்ண வேண்டும் என சொன்னாராம் ராஜேஷ்.
அதன் பிறகு அவருடைய மூச்சு திணறல் அதிகமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போகலாம் என ஆம்புலன்ஸை வரவழைத்து போயிருக்கிறார்கள். போகும் வழியிலேயே அவருடைய கண்கள் எல்லாம் மேலே போய் மிகவும் சோர்வுற்று காணப்பட்டு இருந்திருக்கிறார். அதன் பிறகு தான் ஆம்புலன்ஸிலேயே அவர் இறந்தார் என அவருடைய தம்பி கூறி இருக்கிறார்.