என்னை நடிகராக ஏற்றுக்கொண்டால் போதும்!.. கண் கலங்கிய சண்முக பாண்டியன்!...

By :  MURUGAN
Published On 2025-06-14 07:30 IST   |   Updated On 2025-06-14 07:30:00 IST

Padai thalaivan: நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டவர். 2015ம் வருடம் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் 3 வருடங்கள் கழித்து மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை.

அதன்பின் தமிழனென்று சொல் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரெல்லாம் வெளியானது. அதன்பின் படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் நடந்தது. விஜயகாந்த் கடைசியாக கலந்துகொண்ட படப்பிடிப்பு இதுதான்.

ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அதோடு, சண்முக பாண்டியன் அப்பாவை கவனித்துக்கொண்டார். எனவே, மதுர வீரன் படத்திற்கு பின் கடந்த 7 வருடங்களாக சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது படை தலைவன் படம் மூலம் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார்.


இந்த படம் நேற்று காலை தமிழகத்தில் வெளியானது. விஜயகாந்தின் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து வருகிறார்கள். தான் ஆசையாக வளர்க்கும் யானையை சிலர் கடத்தி சென்றுவிட சண்முக பாண்டியன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பையே சண்முக பாண்டியன் கொடுத்திருக்கிறார்

பல காட்சிகளில் அப்பாவை நினைவு படுத்துகிறார். அப்பாவை போலவே சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். படத்தின் திரைக்கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருந்தால் படம் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் என பலரும் சொல்லி வருகிறார். இந்நிலையில், சண்முக பாண்டியனும், அவரின் சகோதரர் விஜய பிரபாகரனும் சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்கள். ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது சண்முக பாண்டியன் அழுதபடி வந்தார். செய்தியாளர்களிடம் அவரால் பேசவே முடியவில்லை. அதன்பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசிய அவர் ‘என்னை நடிகராக மக்கள் ஏற்றுக்கொண்டால் போதும்’ என பேசி கண் கலங்கினார். அவருக்கு பின் பேசிய விஜய பிரபாகரன் ‘சண்முக பாண்டியனின் கடைசிப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது. அப்பாவை கவனித்துகொண்டதால் அவரால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை’ என சொல்லிவிட்டு அதற்கு மேல் பேசமுடியாமல் அழுதார்.

அதன்பின் பேசிய அவர் ‘சண்முக பாண்டியனுக்கு ஆதரவு கொடுங்கள். இதை கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. அதை செய்யும் கடமை உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் இருவரும் மக்களுக்காக வந்திருக்கிறோம். உங்கள் ஆதரவு தேவை’ என கோரிக்கை வைத்தார்.

Tags:    

Similar News