உதவி இயக்குனராகுற ஆசைல சூப்பர் கதையோடு வந்தவர்... இதெல்லாம் KSR கிட்ட பலிக்குமா?
நாட்டாமை, படையப்பா, முத்து, அவ்வை சண்முகி, தசாவதாரம் என பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் சினிமாவில் அப்போது பரபரப்பாக இருந்த காலகட்டம். அந்த சமயத்தில் மத்திய மந்திரியின் சிபாரிசு கடிதத்தோடு ஒருவர் அவரிடம் உதவியாளராக சேர வந்தார். அப்போது அந்த இளைஞரிடம் கே.எஸ்.ரவிக்குமார் 'கதையெல்லாம் எழுதுவியா?'ன்னு கேட்டார். 'நல்லா எழுதுவேன்' என்றார் அவர்.
'நாளைக்கு வரும்போது ஒரு கதை எழுதிக் கொண்டு வா. அதைப் படித்துப் பார்த்துவிட்டு சேர்க்கலாமா, இல்லையா என்று முடிவு பண்ணுகிறேன்' என்றார் கேஎஸ்.ரவிக்குமார். மறுநாள் கேஎஸ்.ரவிக்குமாரைப் பார்க்க அந்த இளைஞர் அலுவலகத்துக்கு வந்தார். ஆனால் அங்கு அவர் இல்லை. அவருடைய உதவியாளர்கள் இருந்தனர். அந்த இளைஞர் உதவியாளர்களிடம் கேஎஸ்.ரவிக்குமார் கதை எழுதி வரச் சொன்ன விவரத்தைச் சொன்னார். அந்தக் கதையைப் படித்துப் பார்த்த உதவியாளர்கள் எல்லாருமே அசந்து போனார்கள்.
அவ்வளவு நேர்த்தியாக அந்தக் கதை எழுதப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து கேஎஸ்.ரவிக்குமார் வந்தார். அவரிடம் அந்தக் கதையைக் கொடுத்தார் இளைஞர். உதவி இயக்குனர்கள் எல்லாரும் அந்தக் கதை மிகச்சிறப்பாக இருக்கிறது. நிச்சயமாக அந்த இளைஞரை கேஎஸ்.ரவிக்குமார் உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்வார் என்றே நினைத்தனர். ஆனால் அன்றைக்கு நடந்த விஷயம் அதற்கு நேர்மாறாக இருந்தது.
'இப்போதைக்கு எங்கிட்ட நிறைய உதவியாளர்கள் இருக்காங்க. இன்னொரு சமயம் சொல்லி அனுப்புறேன்'னு அந்த இளைஞரிடம் சொல்லி அனுப்பி விட்டார் கேஎஸ்.ரவிக்குமார். 'ஏன் அப்படி இயக்குனர் நடந்து கொண்டார்' என அந்த உதவி இயக்குனர்கள் எல்லோரின் மனதிலும் அந்தக் கேள்வி எழுந்தது. அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் அவர்கள் நேரிடையாகவே கேஎஸ்.ரவிக்குமாரிடம் கேட்டனர்.
'அவர் எழுதிக் கொண்டு வந்த கதை ரொம்ப நல்லா இருந்தது. அப்படி இருந்தும் ஏன் அவரை நீங்கள் உதவி இயக்குனராக வைத்துக் கொள்ளவில்லை?' என்று கேட்டனர். அதற்கு கேஎஸ்.ரவிக்குமார், 'அந்தக் கதை ரொம்ப நல்லாருந்தது உண்மைதான். ஆனால் அதை அவரே சொந்தமா எழுதி இருந்தா நிச்சயமா சேர்த்துருப்பேன். அது எழுத்தாளர் தபு சங்கர் எழுதிய கதை. அதை அப்படியே வரி மாறாமல் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். அது புத்தகமாகவும் வந்துள்ளது' என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
இதுல இன்னொரு ஆச்சரியம் என்னன்னா அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் அவர் தினமும் புத்தகம் வாசிப்பாராம். அந்தப் பழக்கம் இன்று வரை அவரிடம் உள்ளதால்தான் அவர் பேசப்படும் இயக்குனராக உள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.