ரமணா படத்தின்போது முருகதாஸ் சொன்ன விஷயம்... A சென்டரிலும் விஜயகாந்த்... மைத்துனர் சொன்ன தகவல்
சண்முகப்பாண்டியன் நடித்த படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் பேசும்போது ரமணா கதை குறித்தும், சண்முகப்பாண்டியன் குறித்தும் சில தகவல்களைத் தந்தார். என்னன்னு பாருங்க.
சண்முகப்பாண்டியன் முதல்ல நடிச்ச படம் சகாப்தம். மியூசிக் கார்த்திக் ராஜா. படைத்தலைவன் இசைஞானி. 3வது படம் யுவன் சங்கர் ராஜா. இளையராஜா குடும்பத்துல 3 இசை அமைப்பாளர்களின் இசையில் நடிச்ச ஒரே ஹீரோ சண்முகப்பாண்டியன் தான்.
2001ல ஏ.ஆர்.முருகதாஸ் கதை சொல்ல வந்தாரு. நானும், கேப்டனும் இருந்தோம். கதை சொல்ல வரும்போது கேட்டோம். அப்போ என்கிட்ட பேசுனாரு. 'சார் எனக்கு இன்னும் 6 மாசத்துல கல்யாணம் நடக்குது. நீங்க கேப்டனை அழைச்சிட்டு வரணும்'னு சொல்றாரு. 'முதல்ல படத்தை எடுத்து முடி. படத்தை ஹிட் கொடு. நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு கேப்டனை அழைச்சிட்டு வர்றேன்'னு சொன்னேன்.
படம் முடிஞ்சது. பிரிவியு தியேட்டர்ல நான், சகோதரி எல்லாம் படம் பார்க்கப் போறோம். இன்டர்வல் வரைக்கும் எங்க கூட இருந்து முருகதாஸ் படம் பார்த்தாரு. அப்புறம் காணாமப் போயிட்டாரு. கிளைமாக்ஸ்ல ஆளையே காணோம்.
ஏன்னா அவருக்கு என்ன கிளைமாக்ஸ்னு தெரியும். அவருக்குப் பயம் என்ன சொல்வாங்களோன்னு? கேப்டனுக்குத் தெரியும். 'எனக்கு பிரச்சனை இல்லை. நீ சுதீஷ்கிட்டயும், பிரேமா கிட்டயும் கிளைமாக்ஸைக் கேட்டுக்கோ. அவங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே'ன்னாராம். நான் தேடுறேன்.
அப்புறம் பார்த்ததும் அவரைக் கட்டிப்பிடிச்சிட்டு 'சூப்பர் கிளைமாக்ஸ்'னு சொன்னேன். அதுதான் ரமணா. அந்தப் படத்துக்கு முன்னாடி வரை கேப்டனை B அண்டு C ஹீரோன்னு தான் சொன்னாங்க. ரமணா வந்ததுக்கு அப்புறம் 'A' சென்டர்லயும் ஹிட் ஆனார். அப்புறம் கள்ளக்குறிச்சியில அவரு திருமணம் மாநாடு மாதிரி நடக்குது. கேப்டனோடு போனேன். அங்கே தான் அரசியல் பேசினார். அங்கே தான் ஆரம்பிச்சது தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிறார் எல்.கே.சுதீஷ்.