விஜயகாந்துக்குப் பதில் நடித்த ராஜேஷ்... முதல் படமே சூப்பர்ஹிட் தான்..!

By :  SANKARAN
Published On 2025-05-29 13:47 IST   |   Updated On 2025-05-29 13:58:00 IST

நடிகர் ராஜேஷ் இன்று காலை மூச்சுத்திணறலால் காலமானார். இது திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ்த்திரை உலகில் ஹீரோ, குணச்சித்திர வேடங்களை ஏற்று 150 படங்கள் வரை நடித்துள்ளார். தமிழை அருமையாக உச்சரிப்பார். யதார்த்தமான நடிப்பு ஆற்றலால் ஏராளமான ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தார்.

ஆரம்பத்தில் 7 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி விட்டு ஆர்வம் காரணமாக தமிழ்சினிமா உலகில் நுழைந்தார். இவர் நடித்த முதல் படம் கன்னிப்பருவத்திலே. பாக்கியராஜ் தான் இயக்குனர். இந்தப் படத்தில் பாக்கியராஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு விஜயகாந்தைத் தான் பாக்கியராஜ் தேர்ந்தெடுத்தாராம். அப்போது விஜயகாந்த் புதுமுகமாக இருந்ததால் தயாரிப்பாளருக்கு அவரை நடிக்க வைப்பதில் விருப்பமில்லையாம். வேறு யாரையாவது ஹீரோவாகப் போடுங்கள் என பாக்கியராஜிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது பாக்கியராஜின் கண்ணில் பட்டவர்தான் நடிகர் ராஜேஷ். அவர் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்த பாக்கியராஜ் அவரையே ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார்.


1979ல் பிஏ.பாலகுரு இயக்கத்தில் கன்னிப்பருவத்திலே படம் வெளியானது. பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தை தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். பாக்கியராஜ் திரைக்கதை எழுதி நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ராஜேஷ் நடித்துள்ளார். வடிவுக்கரசி தான் ஜோடி. சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.

படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. படத்தின் ஹீரோ ராஜேஷ் ஜல்லிக்கட்டு விளையாட்டில் காயம் பட்டு ஆண்மையை இழந்து விடுகிறான். அவனது மனைவி வடிவுக்கரசி. அவளைத் தாம்பத்தியத்தில் திருப்திப்படுத்த முடியவில்லை. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறான். அந்த நிலையில் பாக்கியராஜ் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறார். அடுத்து நடப்பது என்ன என்பதுதான் கதை. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

பாடல்கள் எல்லாமே தேன் சொட்டும் ரகங்கள். ஆவாரம் பூமேனி, பட்டுவண்ண ரோசாவாம், நடைய மாத்து, அடி அம்மாடி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Tags:    

Similar News