கமலிடம் விவேக் கேட்ட ஏடாகூட கேள்விகள்... தெறிக்க விட்ட பதில்கள்!
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் கமலிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். அதை ரஜினியும் அமர்ந்து ரசித்துப் பார்க்கிறார். கமல் அசால்டாக பதிலை அள்ளித் தெளிக்கிறார். வாங்க பார்க்கலாம்.
ஆன்மிகம் எட்டிப்பார்க்கிறதா?: கமலிடம் இதுவரை மத உணர்வு இல்லாமல் நீங்கள் இருந்து விட்டீர்கள். வயது ஏற ஏற அனுபவம் கூட கூட எங்காவது ஆன்மிகம் எட்டிப்பார்க்கிறதா? என்று விவேக் கேள்வி கேட்டார். அதற்கு கமல் சொன்ன அல்டிமேட் பதில் இதுதான்.
நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல்தான் பார்த்துக் கொள்வேன். இப்போதே அவ்வாறே வயது கூட கூட ஞானமும், அனுபவமும், அறிவும் கூடும். அறிவு கூட கூட அதைப் பகுத்தறியும் உணர்வும் கூடியே தீரும் என்று 'நச்'சென்று சொன்னார் கமல்.
உங்களுடைய டுவிட்டர் தமிழ் வந்து பரவலாக பரபரப்பாக எப்போதும் பேசப்படுகிறது. அதன்மூலமா சமுதாயத்துக்குப் பல கருத்துகளை சொல்றீங்க. இருந்தாலும் சாதாரணமா பேசுறது வேற. டுவிட்டர்ல இருக்குற சுத்த தமிழ்ல வேற. அதைப் பற்றி என்ன சொல்றீங்கன்னு விவேக் கேட்கிறார்.
அதற்கு பதில் சொன்ன கமல் கரகோஷம் எழுப்ப வைத்துவிட்டார். சிறு குழந்தைகள் சமிக்ஞை மொழியில் பேசும்போது காணா பாஷைன்னு சொல்வாங்க. முதலில் ஒரு க போட்டு விளையாடுவார்கள். அது உடனே புரிந்து விடக்கூடாது என்பதற்கான உத்தி தான் அது. சொல்ல வேண்டியதை அழுத்திச் சொல்ல வேண்டும்.
தமிழர்களுக்கு புரியாமல் போகலாம்: அதை மெது மெதுவாக எப்படி மோட்டார் சைக்கிள்ல ஆக்சிலரேட்டரைக் கூட்டுறோமோ அந்த மாதிரி. சில விஷயங்கள் பொத்தாம் பொதுவாக சொல்லும்போது அது கெட்டவார்த்தை மாதிரி தோன்றும். அதற்காக பூடகமாக நல்ல தமிழ்ச் சொற்களை உபயோகிக்கும்போது சில தமிழர்களுக்கு அது புரியாமல் போகலாம். அதுவும் நல்லதே.
ஞானம்: அதுபோல நடனம், பாடல், இசை, நகைச்சுவை, குணச்சித்திரம், சண்டை மற்றும் தொழில்நுட்பத்தில் வித்வானாக இருக்கிறீர்கள். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அடைந்து விட்டோம் என்ற நிறைவு வந்திருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு தேவை என்பது மனிதனுக்கு எல்லை இல்லாத விஷயம். இது போதும் என்ற முடிவு வந்துவிட்டாலே ஞானம் வந்துவிட்டதாக அர்த்தம். எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதுதான்.
நல்ல முயற்சி: காரணம் இது மட்டும் தேவை என்று தெரிகிறது. இந்த கரகோஷம் தேவை என்று தெரிகிறது. இதற்கான தகுதிகள் என்ன என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு அது இருக்கிறதா என்று நீங்கள் சொல்லும்போது இருப்பது போன்ற சந்தேகம் வருகிறது. நான் தனிமையில் இருந்து யோசிக்கும்போதும், என் முன்னோர்களைப் பற்றிச் சிந்திக்கும்போதும் அந்தத் தகுதி இனிமேல்தான் வர வேண்டும். அந்த முயற்சியை செய்து கொண்டு போனாலும் அது நல்ல முயற்சிதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.