Cinema History
30 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த தேவர்மகன் – ஓர் பார்வை
நடிகர் சிவாஜி பல தரப்பட்ட வேடங்களில் நடித்து அசத்தியவர். அதே போல பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்து அசத்திக் கொண்டு வருபவர் கமல். இருவரும் இணைந்து நடித்த மறக்கமுடியாத படம் தேவர் மகன். நடிகர் சிவாஜியின் பார்த்தால் பசி தீரும் படத்தில் கமல் சிறுவனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவர் மகன் படத்தில் இருவரும் செம மாஸாக நடித்து இருந்தனர்.
1992ல் கமல் இயக்குனர் பரதனுடன் கைகோர்த்து தனது சொந்தப்படமாக எடுத்தார். இந்தப் படம் அந்த வருடத்தில் தீபாவளிக்குத் திரைவிருந்தாக வெளியானது. 30 வருடங்களைக் கடந்தும் இந்தப்படம் பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன. அதைப் பற்றிப் பார்க்கலாமா…
சிவாஜி ஊர் தலைவராகவும், கமலுக்குத் தந்தையாகவும் வேடமேற்றுள்ளார். படத்தின் வசனங்களை கமல் எழுதியது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஒரு தந்தையாக இருக்கும் சிவாஜி தனது மகனிடம் அதுவும் கமலிடம் எப்படி சகஜமாகப் பழகுகிறார் என்பதையும் அவருக்குப் பின்னால் கமல் எப்படி தந்தைக்கான பொறுப்பை ஏற்று ஊர் மக்களை வழி நடத்துகிறார் என்பதையும் படம் வெகு யதார்த்தமாகவும் அழகாகவும் விவரித்தது.
படம் ரொம்பவே பாப்புலராகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்க முக்கியக் காரணம் என்னன்னா அது திரைக்கதையும், வசனமும் தான். இந்தப் புகழ் கமலுக்குத் தான் சொந்தம்.
கமல் படத்தில் 2 முற்றிலும் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்துள்ளார். பிசினஸ் மேனாகவும், இடைவேளைக்குப் பிறகு ஊர் தலைவராகவும் நடித்து இருந்தது திரையரங்கிற்கு வராத ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து இழுத்தது.
கதாநாயகியாக வலம் வந்த ரேவதியின் கேரக்டரும் பேசும் விதத்தில் அமைந்து இருந்தது. கமலுக்கு மனைவியாக வரும் அவர் வெகுளியாக நடித்து இருந்தார்.
கமல் திடீரென எடுத்த முடிவால் சில மணித்துளிகளுக்குள் அவரது வாழ்க்கையே மாறியது ரசிகர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. கௌதமி இன்னொரு முக்கியமான கிளாமர் ஹீரோயினாக நடித்து கமலின் காதலியாக வந்து அசத்தியுள்ளார்.
நாசர் அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தில் வந்தது படத்திற்கு கூடுதல் வலிமையை சேர்த்தது. படத்தில் அடிக்கடி கமலுடன் வசனங்களாலும் சண்டைக் காட்சிகளிலும் மோதியது பார்வையாளர் களுக்கு ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.
எத்தனையோ படங்களில் இருவரும் ஹீரோ, வில்லன்களாக நடித்து இருந்தாலும் தேவர்மகன் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த படம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. நாசர் ஊர் தலைவராக முயற்சி செய்து அந்தப் பலன் நிறைவேறாமல் போக, கமலுக்கு அந்தப் பதவி கிடைக்கிறது.
ஆனால் அதை சிறப்பாக வழிநடத்துவதற்குள் நாசரின் மூர்க்கமான வில்லத்தனத்தால் கமலின் வாழ்க்கையும் வீணாகப் போகிறது. படத்தில் வன்முறை கூடாது என்பதை அழகியலாக எடுத்துச் சொல்லிய விதம் அருமை.
இளையராஜாவின் கிராமத்து வாசனை வீசும் தனித்துவமான இசையும் படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட். பாடல்கள் அத்தனையும் தேனாறு. வானம் தொட்டு போனா என்ற பாடல் நெஞ்சத்தைக் கிள்ளும் விதத்தில் அமைந்தது. இந்த ராகதேவனின் இசையானது கதையை ஆழமாக ரசிக்க வைத்தது.