Ilayaraja: 80களில் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பெரிய நடிகர்கள் முதல் சின்ன நடிகர்கள் வரை தங்களின் படங்களின் வெற்றிக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்ட காலம் அது. ரஜினி, கமல், மோகன், ராமராஜன், விஜயகாந்த் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இளையராஜாதான் இசை. இவரின் இசையை நம்பியே பல படங்களும் உருவானது.

இளையராஜாவும் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பல திரைப்படங்களையும் ஓட வைத்தார். இயக்குனர், தயாரிப்பாளர்களை தாண்டி ஒரு படம் பற்றி இளையராஜாவின் கருத்து மிகவும் முக்கியமான ஒன்றாக திரையுலகில் பார்க்கப்பட்டது. அவர் சொல்லும் மாற்றங்களை படத்தில் இயக்குனரும் செய்வார்.

ராமரஜனை வைத்து என் ராசாவின் மனசிலே படத்தை எடுக்க திட்டமிடிருந்தார் ராஜ்கிரண். அந்த படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர். ஆனால், ராமராஜனின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதுபற்றி ராஜ்கிரண் இளையராஜாவிடம் பேசியபோது ‘பேசாமல் நீங்களே இந்த படத்தில் ஹீரோவாக நடியுங்கள்’ என சொல்ல, நடிக்க துவங்கியவர்தான் ராஜ்கிரண். ஹீரோவாக ஹிட் படங்களை கொடுத்துவிட்டு இப்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.

ரஜினியை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியவர் பி.வாசு. இவரின் படங்களுக்கு எப்போதும் இளையராஜாவே இசையமைப்பார். அப்படி பி.வாசு இயக்கி ரஜினி நடித்த திரைப்படம்தான் மன்னன். விஜயசாந்தி, குஷ்பு, விசு, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்த இந்த திரைப்படம் ரஜினிக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்தார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘இந்த படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல். ஜனனி. ஜனனி போல பாடல் வேண்டும் என பி.வாசு கேட்டார். அப்படி உருவாக்கிய பாடல்தான் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல். ஆனால், ரஜினிக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை. ‘எனக்கு துள்ளலாக இருக்கும் பாடல்தான் வேண்டும். இளையராஜா எனக்கு எதற்கு இப்படி ஒரு பாடலை போட்டார்?’ என கோபப்பட்டிருக்கிறார். இந்த பாடலில் நடிக்க ஷூட்டிங் வந்து ஆனால், நடிக்காமல் திரும்பி போயிருக்கிறார்.

இதை என்னிடம் சொல்ல ரஜினியை என்னை பார்க்க வருமாறு அழைத்தேன். அவரிடம் ‘சாமி நீங்க ஆக்சன் ஹீரோதான். ஆனா சில பாடல்தான் ஒரு நடிகரை வீட்டில் இருக்கும் ஒருவராக மாற்றும். இது அந்த மாதிரியான பாடல். தயங்காமல் நடியுங்கள்’ என சொன்னேன். ‘அப்படியா சாமி சொல்றீங்க.. நீங்க சொன்னா சரி’ என சொல்லிவிட்டு அந்த பாடலில் நடித்து கொடுத்தார்’ என இளையராஜா சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *