Ilayaraaja: மதுரை மாவட்டம் பண்ணைபுரத்தை சொந்த ஊராக கொண்டவர் இளையராஜா. சிறு வயது முதல் இசையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஜெயராமன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்தார். இசை அவரை தனக்குள் இழுத்துக்கொண்டது. அது என்னவோ செய்ய கிடைக்கும் வாத்திய கருவிகளை இசையமைக்க துவங்கினார். சில இசைக்கருவிகளை அவரே உருவாக்கினார்.

பள்ளிக்கு நடந்து போகும்போதே அப்போது சினிமாவில் வெளிவந்த பாடல்கள் ரேடியோவில் ஒலிக்கும். அதையெல்லாம் கேட்டுக்கொண்டே செல்வாராம். டீன் ஏஜில் அண்ணன் பாஸ்கர் மற்றும் தம்பி கங்கை அமரனுடன் சேர்ந்து ஒரு இசை குழுவையும் அவர் உருவாக்கினார். பெரும்பாலும் கம்யூனிஸ்ட் மேடைகளில் அவர்கள் பாட்டு பாடி இசையமைப்பார்கள்.

அப்போதெல்லாம் அவர்கள் பாடியது சினிமா பாடல்தான். சில சமயம் தன்னுடைய சொந்த டியூன்களையும் உள்ளே விட்டு பாடுவாராம் இளையராஜா. இது எந்த படம் என யாராவது கேட்டால் புதுப்படம். பாடல் இனிமேல்தான் வரும் என சொல்லிவிடுவாராம். அந்த பாடல்களுக்கு கைத்தட்டல் கிடைக்கவே இசையமைப்பாளர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து பாஸ்கர், கங்கை அமரனுடன் சேர்ந்து சென்னைக்கு பஸ் ஏறினார் இளையராஜா. பாரதிராஜா தங்கிய அறையில் தங்கி சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக சேர்ந்தார். அதோடு, கிடார், வயலின், கீ போர்டு என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாஸ்டரிடம் கற்றுகொண்டார்.

இனிமேல் நாம் இசையமைக்கலாம் என்கிற நம்பிக்கை வந்தபின் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டார். யாரும் அவரை நம்பவில்லை. கதாசிரியரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் ராஜாவை நம்பி அன்னக்கிளி படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் இசையுலகில் உச்சம் தொட்டார் இளையராஜா.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘8ம் வகுப்பு படிக்க பணம் இல்லை. வீட்டில் அவ்வளவு வறுமை இருந்தது. எனவே, வைகை அணையில் போய் வேலை செய்தே. ஓஸ் பைப்பை பிடித்து தண்ணி பாய்ச்சி கொண்டிருந்தேன்’ என சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *