Cinema News
கமல்ஹாசனுக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்… அந்த ஹிட் பாடல் உருவானது இப்படித்தான்… அடடா!!
1988 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அமலா, ஜனகராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சத்யா”. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக லதா மங்கேஷ்கரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்து பாடிய ‘வலையோசை” என்ற பாடல் இப்போதும் ரசிக்கத்தக்க பாடலாக காலம் தொட்டு நிற்கிறது. இந்த நிலையில் இப்பாடல் உருவான விதம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பார்க்கலாம்.
“சத்யா” திரைப்படத்தின் பாடல்கள் உருவாக்கத்தின்போது இளையராஜா ஒரு இசைக்கோர்வை உருவாக்கியிருக்கிறார். அந்த ட்யூன் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்துப்போக, “இந்த ட்யூன் என்னுடைய படத்திற்கு வேண்டும்” என கமல்ஹாசன் கேட்டிருக்கிறார்.
அதற்கு இளையராஜா “இந்த ட்யூனை நீங்கள் பயன்படுத்திக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை. ஆனால் இந்த பாடலை லதா மங்கேஷ்கரை பாட வைக்க வேண்டும். அப்படி அவரை பாட வைத்தால்தான் இந்த ட்யூனை உங்களுக்கு தருவேன்” என கண்டிஷன் போட்டாராம் இளையராஜா.
அதன் பின்புதான் கமல்ஹாசன், லதா மங்கேஷ்கரை தொடர்பு கொண்டு அவரை இந்த பாடலை பாட வைத்திருக்கிறார். இப்படித்தான் “வலையோசை” என்ற காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல் உருவானதாம்.