கோலிவுட்டில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. இவர் பாமகவின் தீவிர ஆதரவாளர். அதோடு தனது படங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்மத்தை இவர் காட்டி வருவதாக இவர் மீது விமர்சனங்கள் உண்டு. இவர் இயக்கும் படங்களில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்களை கெட்டவர்கள் போல காட்டுகிறார் என்கிற புகாரும் இவர் மீது உண்டு.
மேலும் தான் சார்ந்த சாதியை தூக்கிப் பிடித்தும் தாழ்த்தப்பட்ட சாதியை கீழ்மைபடுத்தியும் இவர் தொடர்ந்து படமெடுத்து விடுகிறார் என நெட்டிசன்கள் தொடர்ந்து இவரோடு டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் இவருடன் வாக்குவதம் செய்வதுண்டு. தற்போது திரௌபதி 2 படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் திரௌபதி முதல் பாகத்தில் நடித்த நடிகர் ரிச்சட் ரிஷி ஹீரோவாக நடிக்க ரக்சனா என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ‘எம்கோனே’ என்கிற பாடல் உருவாகி இருக்கிறது.. இந்த பாடல் இன்று மாலை 5:02 மணிக்கு வெளியாகியுள்ள நிலையில் இப்பாடலை பாடிய பாடகி சின்மயி ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். எம்கோனே பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர்களின் ஸ்டுடியோவில் இருந்து என்னை பாட அழைத்த போது அங்கு சென்று பாடிவிட்டு வந்து விட்டேன்.
அப்போது அங்கு ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்தால் ஒருபோதும் அந்த பாடலை பாடியிருக்க மாட்டேன். அந்த கொள்கைகளுக்கும் எனக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இதுதான் உண்மை’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.