Cinema History
கடுமையான வார்த்தைகளால் சீண்டிய இயக்குனர்… 8 மணி நேரம் தொடர்ந்து நடனமாடிய நாகேஷ்… அவ்வளவு வெறி!!
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த நாகேஷ், ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது மிகச்சிறப்பாக நடனம் ஆடுபவரும் கூட. “அவளுக்கென்ன அழகிய முகம்”, “கண்ணிநதி ஓரம்”, “மலரென்ற முகமொன்று” போன்ற பல பாடல்களில் சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நாகேஷ்.
ஆனால் தொடக்கத்தில் நாகேஷுக்கு நடனமாடவே வராது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! நாகேஷ் சிறந்த நடிகராக வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு நடனமாட வராததால் பெரும் அவமானத்திற்குள்ளானார் நாகேஷ். அப்படி ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1962 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தெய்வத்தின் தெய்வம்”. இத்திரைப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அத்திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நாகேஷ் நடனமாட வேண்டும் என கூறினார் இயக்குனர்.
ஆனால் நாகேஷ் “எனக்கு நடனமாட வராது” என தெளிவாக கூறிவிட்டார். சிறிது நேரம் யோசித்த இயக்குனர் “சரி, அப்படி என்றால் பாடலின் முதல் வரியில் அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறிவிடுங்கள். பாடலின் இரண்டாவது வரி வரும்போது தென்னை மரத்தில் இருந்து குதித்து விடுங்கள்” என கூறியுள்ளார்.
இதனை கேட்ட நாகேஷ் அதிர்ந்துப்போனார். ஏனென்றால் நாகேஷுக்கு தென்னை மரத்திலும் ஏற வராது. எனினும் இயக்குனர் கோபித்துக்கொள்வார் என்பதற்காக உயிரை பணயம் வைத்து ஏறி, அதன் பின் இரண்டாவது வரி வரும்போது குதித்துவிட்டார்.
ஆனால் மூன்றாவது வரியில் நிச்சயம் நடனமாட வேண்டும் என கூறினாராம் இயக்குனர். “நிச்சயமாக நமக்கு ஆட வராது” என மனதுக்குள் நினைத்துக்கொண்டாராம் நாகேஷ். அந்த நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் நுழைந்த தயாரிப்பாளரிடம் “இந்த நாகேஷை வைத்துக்கொண்டு நான் படாத பாடு படுகிறேன்” என கூறினாராம் இயக்குனர். இது நாகேஷுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.
உடனே இயக்குனரிடம் “இன்று எனக்கு மூட் சரியில்லை. நாளை வருகிறேன்” என கூறிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாரம் நாகேஷ். வீட்டிற்கு வந்த நாகேஷ், தனது வீட்டில் உள்ளவர்களிடம் “நான் எனது அறைக்குள் போகிறேன். நான் வெளியே வருகிறவரை யாரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது” என கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாராம்.
“நாம் எத்தனை நாடகங்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறோம். பலரும் நமது நடிப்பை பாராட்டி வந்திருக்கின்றனர். ஆனால் நமக்கு நடனம் ஆட வராது என்ற ஒரு காரணத்திற்காக நம்மை அந்த இயக்குனர் இப்படி அவமானப்படுத்திவிட்டாரே” என மனதுக்குள் நினைத்து நாகேஷ் வெம்பினாராம்.
அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 மணி நேரம், தனது அறையில் வெவ்வேறு பாடல்களை ஒலிக்கவிட்டு தனது இஷ்டம் போல் நடனமாடினார் நாகேஷ். அதற்கு அடுத்த நாள் படப்பிடிப்பிற்குச் சென்ற நாகேஷ், அந்த பாடலுக்கு அபாரமாக நடனமாடினார். குறிப்பாக அப்பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பச்சொல்லிவிட்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக நடனம் ஆடினாராம்.
இதனை பார்த்த இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆச்சரியப்பட்டுப் போனாராம். அதன் பின் நாகேஷ் ஆடிய வித விதமான நடனங்களை அப்பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஏற்றார் போல் பயன்படுத்திக்கொண்டாராம் இயக்குனர்.