ரசிகர்களை கவர்ந்த நவராத்திரி... சிவாஜி 9 வேடங்களில் நடிக்க காரணமே இதுதான்!..

Navarathiri
தமிழ்ப்பட உலகில் மட்டும் அல்லாமல் இந்திய திரை உலகில் தன் நடிப்பால் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் சிவாஜி.
எந்தக் கேரக்டர் நடித்தாலும் அதில் மாஸ் காட்டுவார் சிவாஜி. அதுதான் அவருக்கு பிளஸ் பாயிண்ட். அப்படித் தான் அவர் தான் நடித்த முதல் படத்திலேயே அனைவரையும் அசர வைத்துவிட்டார். பராசக்தியில் அவர் பேசிய அந்த நீண்ட கோர்ட் வசனத்தை அதுவும் முதல் படத்திலேயே நடித்தால் வேறு எந்த நடிகராலும் இப்படி சூப்பராகப் பேசியிருக்க முடியாது. முதல் படத்திலேயே முத்தாய்ப்பான நடிப்பைக் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார் சிவாஜி.
இவரது வெற்றிக்கு என்ன காரணம் என ஒரு தடவை கேட்டபோது ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் தன்னை ஒரு அறிமுக நடிகராகவே நினைத்துக் கொள்வாராம். பாகப்பிரிவினையைப் பார்த்தால் அச்சு அசல் மாற்றுத்திறனாளியாகவே தோன்றி நடித்து இருப்பார். பாசமலரில் இப்படி ஒரு பாசக்கார அண்ணன் - தங்கையா என்று எண்ணும் அளவு அவரது நடிப்பு இருக்கும்.
இவர் நடித்த படங்களின் இன்று வரை நம்மை வியப்பில் ஆழ்த்துவது நவராத்திரி தான். டெக்னாலஜி இல்லாத காலகட்டத்திலேயே எப்படி இவ்வளவு அற்புதமாக நடித்தார் என்று நம்மை வியக்க வைக்கிறது. படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். படம் வெளியான ஆண்டு 1964.

Sivaji
கதையின் நாயகியாக சாவித்திரி நடித்துள்ளார். சிவாஜி இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட 9 வேடங்களில் நடித்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் சேர்ந்து வந்து நம்மை ஆச்சரியப்படுத்துவர். இது ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
சிவாஜி நாடகங்களில் நடித்த போது சில நாள்கள் நடிப்பு இல்லாமல் இருப்பார். அந்த நாள்களில் பிற நாடகங்களைப் போய் பார்ப்பாராம். அப்படித் தான் டம்பாச்சாரி என்ற நாடகத்தைப் பார்க்க சென்றார். அந்த நாடகத்தில் சாமி ஐயர் 9 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தாராம். இதே போல் தாமும் நடிக்க வேண்டும் என்று அன்றே நினைத்தாராம். அந்த ஆசை 1964ல் தான் பூர்த்தியானது.