Cinema History
ஓவியக்கலையில் பேரார்வம் கொண்ட கமல் பட கதாநாயகி
சில நடிகைகள் நன்றாக நடித்தால் தான் பிடிக்கும். சில நடிகைகள் ஆடினால் தான் பிடிக்கும். சில நடிகைகள் வசனம் பேசினால் தான் பிடிக்கும். ஆனால் இவரை ஒருமுறை பார்த்தாலே பிடித்து விடும். அனைத்து அம்சங்களையும் கனகச்சிதமாகப் பொருந்தியவர் தான் இவர். யார் அந்த நடிகை என்கிறீர்களா? பொறுங்க. இன்னும் பீடிகை முடியவில்லை.
நீள்வட்ட அழகிய முகம். மீன்களைப் போன்ற கண்கள். வசீகரச் சிரிப்புக்குச் சொந்தக்காரி என்றழைக்கப்பட்ட நடிகை சசிகலா தான் அவர். இவரைப் பற்றி ரத்தினச்சுருக்கமாகப் பார்ப்போம்.
சசிகலாவின் தாய்மொழி கன்னடம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழிப்படங்களில் நடித்தவர். இயக்குனர் மணிவண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டார். ஓவியக்கலை, நாட்டியக்கலை, யோகக்கலை மற்றும் சமையல்கலை என பன்முகத்திறமைகளைக் கொண்டவர்.
பாடவந்ததோர் கானம், இசை மேடையில் இன்ப வேளையில், காக்கிச்சட்டை போட்ட மச்சான், மாறுகோ மாறுகோ மாறுகயீ என்ற பாடல்களை இப்போது கேட்டாலும் நமக்கு சசிகலாவின் இளமைத் துள்ளலான ஆட்டமும், மனதை ஊடுருவும் சிரிப்பும் தான் நினைவுக்கு வரும்.
1968ல் கர்நாடகாவின் பெங்களூருவில் மல்கோத்ரா மற்றும் சுலோச்சனா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சாஷிகவுர் மல்கோத்ரா.
இவருக்கு மனோகர் என்ற சகோதரர் உண்டு. சசிகலா குழந்தைப் பருவத்திலேயே குடும்பம் தந்தையின் பணி காரணமாக சென்னைக்கு மாறுதலாகி வந்தது. சசிகலா சென்னையில் தான் பள்ளிப்படிப்பை முடித்தார்.
பள்ளிகளில் ஓவியப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்டு பல பரிசுகளைப் பெற்றார். கல்லூரி படிப்பைத் தொடர முயற்சிக்கையில் இவரது அழகிய வசீகரமான முகம் தமிழ்சினிமாவைத் தன்பால் ஈர்த்தது. மணிவண்ணனின் இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான இளமைக்காலங்கள் படத்தில் சசிகலா அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சினிமாவுக்காக சசிகலா என்ற பெயரில் அறிமுகமானார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்த ரோகிணி தான் இரண்டாம் நாயகி. காதலுக்கு இடையே ஏற்படும் ஊடல், கூடலை பிரம்மாதமாக நடித்து இருப்பார் சசிகலா.
இப்படத்தில் வரும் ஈரமான ரோஜாவே என்ற பாடலை இப்போதும் நம்மால் மறக்க முடியாது. படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஞானப்பறவை, வெற்றிவிழா, சபாஷ், மெட்ராஸ் வாத்தியார், கடமை, சங்கர் குரு, குவா குவா வாத்துக்கள், அன்பின் முகவரி, நவக்கிரக நாயகி, ஊமை விழிகள், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன், நானே வருவேன், ஊர் மரியாதை உள்பட பல படங்களில் இவரது நடிப்பு முத்தாய்ப்பாக இருந்தது.
குறிப்பாக சங்கர் குருவில் ரேகா என்ற கதாபாத்திரத்தில் வரும் சசிகலாவின் நடிப்பு மறக்கவே முடியாது. ஊமைவிழிகள் படத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்வார். தேனிலவுக்கு செல்கையில் வில்லன் ரவிச்சந்திரனால் அபாயகரமான நிலைக்கு தள்ளப்படுவார். என்ன ஒரு பிரமாதமான நடிப்பு என்று சசிகலா நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி விடுவார். இவரைத் தவிர இப்படி ஒரு நடிப்பை வேறெந்த நடிகையாலும் தர முடியாது என்றே சொல்லலாம்.
திரைப்படங்களில் தனது கண்களால் பயம், ஆனந்தம், மகிழ்ச்சி, காதல் என பல முகங்களைக் காட்டி அசத்துவார். படத்தின் அனைத்துப் பாடல்களும் அருமை. குறிப்பாக மாமரத்து பூவெடுத்து பாடல் சூப்பர். வெற்றிவிழா படத்தில் கமலைக் காப்பாற்றும் மருத்துவர் சௌகார் ஜானகியின் உறவினராக ஷர்மி என்ற கதாபாத்திரத்தில் வந்து அசத்துவார்.
கமலைக் காதலிக்கும் இவர் மாறுகோ மாறுகோ என்ற பாடலில் கமலுடன் போட்டி போட்டுக் கொண்டு நடனமாடி அசத்தினார். உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் கார்த்திக் ஜோடி, ஊர் மரியாதை படத்தில் சரத்குமார் ஜோடி என மாறுபட்ட தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார்.
தெலுங்கு திரை உலகில் ரஜனி என்ற பெயரில் அறிமுகமானார். அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து அங்கும் பேர் வாங்கினார். மலையாளப்பட உலகில் மம்முட்டி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். கன்னட உலகில் விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சசிகலா தமிழில் நடித்த கடைசி படம் ஊர் மரியாதை. 1998ல் வெளிநாடு வாழ் இந்தியரான மருத்துவர் முள்ளகிரி பிரவீன் என்பவரை மணந்தார். 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவரது இல்லற வாழ்வோ 10 ஆண்டுகள் வரை தான் நீடித்தது. அதன் பின்னர் கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பிரிந்தனர். இருந்தாலும் வாழ்க்கையில் போராடி பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கும் சிறந்த தாயாகத் திகழ்கிறாள்.