சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலோ அல்லது படங்களில் அரசியல் பேசினாலோ அவர்களின் திரைப்படங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் இதுவரை கொடுக்கப்படாததால் நாளை வெளியாகவிருந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

யாரோ ஒருவர் புகார் கொடுத்ததாகவும் அதனால் மறு தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும். ஏற்கனவே படம் பார்த்தவர்கள் இல்லாமல் வேறு சிலர் படம் பார்க்கவேண்டும்.. அதற்கு அவகாசம் வேண்டும் எனவும் தணிக்கை வாரியம் தரப்பு நேற்று நீதிமன்றத்தில் கூறியது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நாளை (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருக்கிறார். நாளை தீர்ப்பு கொடுத்தாலும் உடனடியாக ஜனநாயகன் வெளியாகுமா என்பதை தெரியவில்லை. ஏனெனில் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே நேற்று இரவு கேவிஎன் நிறுவனம் அறிவித்துவிட்டது.

இதன் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகவே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். சிலரோ அப்படி எதுவும் இல்லை.. தணிக்கை வாரியம் ஒரு படத்தை காரணம் இல்லாமல் நிறுத்தமாட்டார்கள் என சொல்கிறார்கள்.
விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார். அதோடு பாஜக தனது கொள்கை எதிரி.. திமுக தனது அரசியல் எதிரி என தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணியில் விஜயை இணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.. எனவே அந்த கோபத்தைத்தான் இப்படி காட்டுகிறார்கள் என விஜய் ரசிகர்கள் பொங்குகிறார்கள்.

jananayagan

விஜய் சந்தித்த இதே பிரச்சினையை பல வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் சந்தித்திருக்கிறார். அவரின் நாடோடி மன்னன் படத்திற்கு பிரச்சனை வந்தது. அதேபோல், 1966ம் வருடம் எம்ஜிஆர் நடிப்பில் அன்பே வா படம் சென்சாருக்கு சென்றபோது பாடலில் வந்த ‘உதயசூரியனின் பார்வையிலே’ என்கிற வரி இருந்தது. அது திமுக ஆட்சியை குறிப்பதாக சொல்லி தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே அந்த பாடல் வரியை ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என மாற்றப்பட்டு, அதை டி.எம்.எஸ் மீண்டும் பாடி மீண்டும் ரெக்கார்ட் செய்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பி சென்சார் வாங்கினார்கள். எனவே, ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது ஜனநாயகன் படமும் அதுபோல ஒரு பிரச்சினையைத்தான் சந்தித்திருக்கிறது.