கமலின் 2 படங்களுக்கும் ‘No' சொல்லிய துல்கர் சல்மான்!. அட 2 விருதையும் வாங்கிட்டாரே!...
Dulquer Salmaan: நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். மலையாள படங்களில் நடிக்க துவங்கிய இவருக்கு துவக்கத்தில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் நல்ல கதைகளில் நடித்து நடிப்பில் மெருகேறினார். ஒருபக்கம் தமிழிலும் நடிக்க துவங்கினார்.
வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, ஹே சினாமிகா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அப்பாவை போலவே துல்கரும் ஒரு சிறந்த நடிகராக பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் அவர் நடித்து வெளியான பெங்களூர் டேஸ், கிங் ஆப் கோத்தா, சார்லி, குருப் உள்ளிடட் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதுபோக சில நேரிடையான தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படி வெளியான சீதா ராமன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் எவ்வளவு பெரிய இயக்குனரின் படம் என்றாலும் சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால் துல்கர் நடிக்க மறுத்துவிடுவார்.
ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து உருவான இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் துல்கர் சல்மான்தான். ஆனால், சொன்ன தேதியில் ஷூட்டிங் தொடங்கவில்லை என்பதால் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அப்படி வெளியான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. அதேநேரம், இந்த படத்திலிருந்து விலகி துல்கர் நடித்த சீதா ராமம் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு ஆந்திரா மாநிலத்தின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.
அதேபோல், மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான தக் லைப் படத்திலும் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன பிரச்சனையோ!. அந்த படத்திலிருந்து துல்கர் விலகினார். இந்த படத்தில் நடிப்பது தொடார்பாக பேசுவதற்காக மணிரத்னம் அலுவகம் சென்றபோது சில மணி நேரம் அவரை காக்க வைத்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்தே துல்கர் அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்கிற செய்தியும் அப்போது வெளியானது. அனேகமாக அசோக் செல்வன் நடித்த போலீஸ் வேடம் துல்கருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
அப்படி வெளியேறி துல்கர் நடித்த படம்தான் லக்கி பாஸ்கர். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்று வசூலை அள்ளியதோடு துல்கருக்கு மாநில அரசு விருதும் கிடைத்தது.