ரிலீசுக்கு முன்பே கருப்பு படத்துக்கு வந்த பிரச்சனை.. இத எப்படி சமாளிப்பாரு சூர்யா?

By :  ROHINI
Published On 2025-07-26 12:05 IST   |   Updated On 2025-07-26 12:05:00 IST

surya

இந்த முறை சூர்யா தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். 50வது வயதில் அடியெடுத்து வைக்கும் சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தனது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிய அவர்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார் சூர்யா. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை ஈர்க்கவில்லை. கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதற்கு முன் வெளியான கங்குவா திரைப்படமும் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்தது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் அடுத்து சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் கருப்பு. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது திரைப்படம் தான் கருப்பு. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரில் சண்டைக் காட்சிகள் அதிகளவில் காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல் டீசர் வெளியானதில் இருந்தே அந்தப் படத்திற்கு பெரியளவில் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த டீசரை ரசிகர்களுடன் ஆர் ஜே பாலாஜியும் கண்டு களித்தார். அப்போது கருப்பு திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு வருவதாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. சூர்யாவுக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரிஷா நடித்துள்ளார்.

படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக வருவார் என்று சொல்லப்படுகிறது. திரைத்துறையில் மிகவும் சென்ஷேசனாக பேசப்படும் சாய் அபயங்கர்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படியிருக்கும் சூழ்நிலையில் கருப்பு படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு வித பயம் இருக்கிறது. அதற்கு காரணம் ஆர் ஜே பாலாஜிதான். ஏனெனில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு தான் முதலில் ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார் ஆர் ஜே பாலாஜி.

karuppu

ஆனால் மூக்குத்தி அம்மன் பட நிறுவனத்திற்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் இடையே முட்டிக் கொண்டதால் அந்தப் படத்தில் இருந்து விலகினார். அதனால் அந்த கதையை அப்படியே மாற்றி மாசாணி அம்மன் என்ற பெயரில் திரிஷாவை வைத்து எடுக்க முயற்சித்தார் ஆர் ஜே பாலாஜி. ஆனால் அதுவும் நடக்கவில்லை. கடைசியாக அது கருப்பு திரைப்படமாக இப்போது மாறியுள்ளது.

நயன் , திரிஷாவுக்காக எழுதப்பட்ட கதையாக இருக்கும் பட்சத்தில் அது இப்போது சூர்யா திரைப்படமாக மாறியிருந்தால் கண்டிப்பாக கதை சொதப்பி விடுமோ என சூர்யா ரசிகர்கள் இப்போதிலிருந்தே பீதியில் இருக்கிறார்கள். 

Tags:    

Similar News