கண்ணதாசனை விட ஒரு படி மேல போன வாலி... அப்படி என்னதான் நடந்தது?

By :  SANKARAN
Published On 2025-07-02 13:50 IST   |   Updated On 2025-07-02 13:51:00 IST

தமிழ்த்திரை உலகில் கவியரசர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கண்ணதாசன்தான். அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் ரகங்கள். அவருக்கு இணையாக ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்தவர் கவிஞர் வாலி. இவரை வாலிபக் கவிஞர் என்று அழைத்தனர். அந்த அளவு பல தலைமுறைகளாக இளம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் காதல் ரசம் சொட்டும் பாடல்களை எழுதித் தள்ளினார்.

அந்த வகையில் ஒரு விஷயத்தில் கண்ணதாசனை விட வாலி ஒரு படி மேல் போய்விட்டார் என்றே சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அந்தக்காலத்தில் ரொம்பவே பிரபலமானது. அந்த நிறுவனத்தின் படங்கள் என்றாலே அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். படமும் ஹிட்டாகும்.

கண்ணதாசனுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கும் நல்ல நட்பு உண்டு. அதனால் அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டாராம். அவர்கள் தருவதை வாங்கிக் கொள்வாராம். அதே நேரம் வாலியிடம் ஒரு சமயம் அந்த நிறுவனத்திடமிருந்து 1964ல் பாடல் எழுத அழைப்பு வந்ததாம்.

அப்போது அந்த நிறுவனம் கொடுக்கும் சம்பளம் வாலிக்கு குறைவாக இருக்கவே அவர் மறுத்து விட்டாராம். சம்பளம் இவ்வளவு தந்தால்தான் பாடல் எழுதுவேன் என கோரிக்கை வைத்துள்ளார் வாலி. அதைக் கேட்டதும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரைப் போகச் சொல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி வைத்து விட்டார்களாம்.

அதன்பிறகு சென்னை திரும்பிய வாலிக்கு மீண்டும் ஒரு வாரம் கழித்து அதே நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததாம். அப்போது அவரைத் தொடர்பு கொண்டவர் அர்த்தநாரி. இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கு வலது கையாக இருந்தவர். இவர் வாலியிடம் நீங்கள் கேட்ட தொகையை தருவதற்கு நிறுவனம் சம்மதித்து விட்டது.


ஆனால் மொத்த பாடல்களையும் எழுதிவிட்டுத் தான் சென்னை திரும்ப வேண்டும். அதுவரை சேலத்தில்தான் தங்கி இருக்க வேண்டும் என்றார். இன்முகத்தோடு அவர் சொன்னதால் வாலி சம்மதித்தார். அதன்பிறகு பாடல் எழுதி முடித்ததும் உங்க பாஸை நான் பார்க்கணும்னு வாலி அர்த்தநாரியிடம் சொன்னாராம்.

அதற்கு ஏற்பாடு செய்ய வாலி சுந்தரத்தைப் பார்த்துள்ளார். அவருடைய தோற்றத்தைப் பார்த்ததும் அவர் மேல் வாலிக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. வாலி தன்னோட சம்பள டிமாண்டுக்காக வருத்தப்பட்டாராம். அதற்கு சுந்தரம் பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார். தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 3 படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் வாலிக்குக் கிடைத்துள்ளது. 

Tags:    

Similar News