தற்கொலை பண்ணிக்கப் போன எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்க்கை கொடுத்தேன்!.. தயாரிப்பாளர் பகீர் பேட்டி!...
SJ Suriyah: சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தவர்தான் எஸ்.ஜே.சூர்யா. பல முயற்சிகளுக்கு பின் வஸந்த் இயக்கிய ஆசை படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார். அதன்பின் லிவிங்ஸ்டனின் சில படங்களில் வேலை செய்தார்.
ஆசை படத்தில் வேலை செய்த போது அஜித்தின் அறிமுகம் கிடைத்தது. அதை வைத்தே வாலி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் மீது அஜித் வைத்த நம்பிக்கையில் வாலி படம் உருவாகி சூப்பர் ஹிட் அடித்தது. எஸ்.ஜே.சூர்யா கதை சொல்லும் விதத்தை பல பத்திரிக்கைகளும் பாராட்டி எழுந்தியிருந்தார்கள்.
வாலி படம் ஹிட் என்பதால் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின் தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ஒரு படம் இயக்கினார். அந்த படம் ஓடவில்லை. அதன்பின் தமிழில் தான் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்கள் அப்படி வெளியானது.
இந்த படங்களால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்பின் இயக்கத்தைவிட்டு சினிமாவில் நடிக்கும் வேலையை மட்டும் செய்ய துவங்கினார். பெரும்பாலும் வில்லன் வேடங்கள் கிடைத்தது. மாநாடு படம் அவருக்கு பேர் வாங்கி கொடுத்தது. மேலும், விஷாலுடன் இணைந்து நடித்த மார்க் ஆண்டனி படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக எஸ்.ஜே.சூர்யா மாறிவிட்டார்.
துவக்க காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட எஸ்.ஜே.சூர்யா இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், தற்கொலை செய்யும் முடிவில் இருந்த எஸ்.ஜே.சூர்யாவை காப்பாற்றியதாக தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா தயாரித்து இயக்கி நடித்த படங்கள் ஓடவில்லை. நஷ்டம் ஏற்பட்டு சம்பாதித்த பணமெல்லாம் போய்விட்டது.
நடிக்கவோ, படத்தை இயக்குவோ யாரும் அவரை அழைக்கவில்லை. எனவே, விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளலாம் என அவர் முடிவெடுத்தார். நான்தான் அவரை மீட்டு நான் இருக்கிறேன் என நம்பிக்கை சொல்லி இசை படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கி கொடுத்தேன். அப்போது நான் இல்லையெனில் இப்போது எஸ்.ஜே.சூர்யா இல்லை’ என சொல்லி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்.