மகாபாரத கர்ணனை சுட்டு மணிரத்னம் எடுத்த தளபதி!.. ஒரு அலசல்!...

By :  MURUGAN
Published On 2025-06-11 22:44 IST   |   Updated On 2025-06-11 22:44:00 IST

Thalapathy Movie: மகாபாரதத்தில் சூரிய பகவான் மூலம் குந்தி தேவி வயிற்றில் பிறப்பார் கர்ணன். அவர் பிறந்தவுடனேயே ஆற்றில் அனுப்பிவிடுவார் குந்தி தேவி. குழந்தை இல்லாத ஒரு ஆணும் பெண்ணும் அந்த குழந்தையை எடுத்து தங்கள் குழந்தை போல வளர்ப்பார்கள். கர்ணன் வீரமிக்க ஒரு இளைஞராக வளருவார். ஒருகட்டத்தில் துரியோதனின் நட்பு அவருக்கு கிடைக்க அவருடனே தங்கியிருப்பார்.

அர்ச்சுனன் செய்வது நல்லதா கெட்டதா எனக்கு தெரியாது. அவன் என் நண்பன். அவனுக்காக நான் நிற்பேன் என சொல்வர் கர்ணன். ஒருபக்கம் கருணை உள்ளம் கொண்டவர் கர்ணன் மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். மகாபாரத இறுதிப்போரில் நண்பனுக்காக மரணம் அடைவார் கர்ணன். நன்றாக யோசித்தால் இது எல்லாமே மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் இருக்கும்.


13 வயது சிறுமி யாரிடமோ கெட்டுப்போய் கர்ப்பமாகி அவளுக்கு பிறக்கும் குழந்தையை ரயிலில் விட்டுவிட, அந்த குழந்தையை சில சிறுவர்கள் தூக்கி ஆற்றில் விட்டுவிடுவார்கள். அதை ஒரு பெண் எடுத்து வளர்ப்பார். அந்த குழந்தைக்கு சூர்யா எனவும் பெயர் வைப்பார். அந்த சூர்யா (ரஜினி) வளர்ந்து தவறு செய்த மம்முட்டியின் ஆளை அடிக்க அவர் இறந்துவிடுவார். இது மம்முட்டிக்கு கோபத்தை ஏற்படுத்த ரஜினியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து உரிப்பார்கள். ஆனால், தனது ஆள் செய்தது தவறு என்பதை தெரிந்துகொண்ட மம்முட்டி ரஜினியை வெளியே எடுப்பார். அதன்பின் ரஜினியும், மம்முட்டியும் நண்பராகி விடுவார்கள்.

மம்முட்டியின் கதாபாத்திரத்தை துரியோதனன் போலவும், ரஜினியின் கதாபாத்திரத்தை கர்ணன் போலவும் சித்தரித்திருப்பார் மணிரத்னம். குந்திதேவி கதாபாத்திரம் ஸ்ரீவித்யாவுக்கு. அர்ச்சுனன் கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு. கலெக்டராக அவரும் அரவிந்த்சாமியின் அண்ணன் ரஜினி. ஆனால் இது தெரியாமல் அவரையும், மம்முட்டியும் அழிக்க நினைப்பார் அரவிந்த்சாமி. சூர்யாதான் தன் மகன் என்பது தெரிந்தபின் தவிக்கும் தாயாக ஸ்ரீவித்யா சிறப்பாக நடித்திருப்பார். மம்முட்டியை எதிரியாக பார்க்கும் வில்லன் அம்ரிஷ் பூரி அவரை கொன்றுவிட ரஜினி அவரை கொல்வதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.


கர்ணன் படத்தில் வருவது போல நண்பனுக்காக ரஜினி இறந்து போவது போலவும், வில்லனை மம்முட்டி கொல்வது போலவும்தான் மணிரத்னம் முதலில் கதை எழுதியிருந்தார். ஆனால், ரஜினியை இறந்தது போல் காட்டினால் அவரின் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என பலரும் சொன்னதால் கிளைமேக்ஸை மாற்றினார். இந்த படத்தில் ரஜினியை காதலிக்கும் பெண்ணாக ஷோபனாவும், மனைவியாக பானுப்பிரியாவும் நடித்திருந்தார்கள்.

இந்த படத்திற்கு இளையராஜா கொடுத்த அனைத்து பாடல்களுமே மனதை மயக்கும் படி அமைத்திருந்தது. ஜானகி பாடிய ‘சின்னத்தாயவள்’ பாடல் ரசிகர்களை உருக வைத்தது, எஸ்.பி.பி பாடிய ‘ராக்கம்மா கையத்தட்டு’ துள்ளலான பாடலாக அமைந்தது. எஸ்.பி.பியும், யேசுதாஸும் இணைந்து பாடிய ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. எஸ்.பி.பி, ஜானகி இணைந்து பாடிய ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் அற்புதமான மெலடியாக அமைந்தது.


இந்த படத்திற்கு சந்தோஷன் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஷ் இந்த படத்தை தயாரித்திருந்தார். 1991ம் வருடம் நவம்பர் 5ம் தேதி தீபாவளிக்கு இப்படம் வெளியாகி ஹிட் படமாக அமைந்தது. 3 கோடி செலவில் இப்படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. கமலின் குணா படம் இதற்கு போட்டியாக வெளியாகி பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.


ரஜினி கடைசியாக மிகவும் அழகாக இருந்தது இந்த படம்தான் என சிலர் சொல்வார்கள். ரஜினி ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் படமாக இப்போதும் தளபதியே இருக்கிறது. ரஜினியை அவரின் வழக்கமான பாணியிலிருந்து விலகி நடிக்க வைத்திருந்தார் மணிரத்னம். அதேநேரம், இந்த படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்கவே இல்லை.

Tags:    

Similar News